"அதுவும் சரிதான்" என்றார் கோவர்த்தனன். "இங்கு வந்துள்ள ஸி.ஐ.டிகள் வெறும் உதவாக்கரைகள். சென்னையில் கமிஷனருக்கு ஃபோன் போட்டுக் கெட்டிக்காரர்களாக இன்னும் நாலு பேரைத் தேர்ந் தெடுத்து அனுப்பச் சொல்கிறேன்" என்று கூறியவாறே எழுந்து வாசலை நோக்கி நடந்தார் கோவர்த்தனன். "நான் வரட்டுமா, பவானி? உமாகாந்த் பற்றி நான் கூறிய தெல்லாம் ஞாபகமிருக்கட்டும். ஹி இஸ் அ டேன்ஜரஸ் ஃபெல்லோ! சிறைப்படுவதற்கு முன் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் குத்திக் காயப்படுத்தியிருக்கிறான். சிறையிலிருந்து தப்பிய போதும் இரண்டு காவலர்களைத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறான். மறுபடியும் பிடிபட்டால்...." கோவர்த்தனன் காரில் ஏறிக் கதவைச் சாத்திக் கொண்டார்..... "எந்த ஜட்ஜானாலும் குறைந்தபட்சம் பத்து வருஷம் தீட்டி விடுவார்! விஷயம் தெரிந்து அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் யாரானாலும் அவர்கள்பாடும் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம்தான். ஹார்பரிங் அ கிரிமினல். இரண்டு வருஷமாவது கம்பி எண்ண வேண்டியிருக்கும்!"
பவானியின் மேனி இதைக் கேட்டு நடுங்குவதைப் பார்த்தார் கோவர்த்தனன். கொடூரமான ஒரு திருப்திப் புன்னகையுடன் காரைக் கிளப்பிச் செலுத்திக் கொண்டு போனார்.
----------------
தொடரும்...