"ஆமாம், பவானி! என் அப்பா உமாகாந்த் பற்றி உன்னிடம் என்ன கூறினார்? தேசபக்தத் தியாகி; ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டதால் உள்ளே தள்ளிவிட்டார்கள் என்றுதானே?"
"ஆமாம்."
"அதுவும் ஓர் ஏமாற்று வேலைதான்! அவர் கூறியது முழுப் பொய்!"
"பொய்யா? எதற்காகப் பொய் சொல்லி என்னை ஏமாற்ற வேண்டும்?" ------------
128.jpg "பின்னே, தம் மகன் பாங்கில் கொள்ளை அடித்துவிட்டு அகப்பட்டுக் கொண்டான்; கம்பி எண்ணுகிறான் என்று ஒரு பெண்ணிடம் ஒப்புக் கொள்ள எந்தத் தகப்பனுக்கு மனம் வரும்?"
"எனக்குத் தலையைச் சுற்றுகிறது" என்றாள் பவானி.
"ஸ்டெடி! ஸ்டெடி!" என்று அன்பும் ஆதரவுமாகக் கூறியபடியே பரிவுடன் எழுந்து வந்து தன் சட்டைப் பையிலிருந்த கைக்குட்டையால் அவள் நெற்றியில் முத்து முத்தாய் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்தார் கோவர்த்தனன். உரிமையோடு உள்ளே சாப்பாட்டு அறைக்குச் சென்று அங்கிருந்த மண் கூஜாவிலிருந்து ஜில்லென்ற தண்ணீர் கொண்டு வந்து உபசரித்தார்.
"இப்படி நீ கலங்கிப் போவாய் என்பதால்தான் இத்தனை நாள் வரை உன்னிடம் இதையெல்லாம் சொல்லாமலே இருந்தேன், பவானி. என் தம்பி பற்றி அவமானத்துக்குரிய விஷயங்களைப் பேச எனக்கு மனமும் வரவில்லை.
"இப்போது மட்டும் மனம் வந்ததாக்கும்" என்றாள் பவானி, கோபத்தை மறைத்துக் கொள்ளாமல்.
"வேறு வழியில்லை, பவானி! நீ கோபப் பட்டாலும் நான் கூறித்தான் ஆகவேண்டும். உமாகாந்த் ஜெயிலிலிருந்து தப்பிவிட்டான். அவனைப் பின்துரத்திக் கொண்டு இரண்டு ஸி.ஐ.டி.கள் அவன் புகைப்படத்துடன் வந்திருக்கிறார்கள். சில காலம் முன்பு எனக்கும் உமாகாந்துக்கும் இடையில்