"யோசனை பண்ணாதே, பவானி! ஏதாவது உதவி தேவை என்றால் உடனே ஃபோன் பண்ணு!" பவானி அதற்கு ஆகட்டும் என்று பதில் கூறவில்லை. அதற்கு பதிலாக, "எனக்கு இத்தனை நாட்களாகப் புரியாமலிருந்த ஒரு விஷயம் இப்போதுதான் அர்த்தமாகிறது" என்றாள்.
"என்ன அது?" "உங்களை முதன் முதலாக ராமப்பட்டணத்தில் பார்த்த போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.
என்னையும் அறியாமல் உங்களிடம் ஒரு மதிப்பும் மரியாதையும் என்னிடம் ஏற்பட்டு வளர்ந்தது. உமாகாந்தின் ஜாடைகளை உங்களிடம் நான் கண்டதால்தான் என் மனம் அப்படி உங்களிடம் கவர்ந்து இழுக்கப் பட்டிருக்கிறது."
"மதிப்பும் மரியாதையும் உருவாக்கிய கவர்ச்சி மட்டும்தானா பவானி? அதற்கு அதிகமாக ஒன்றுமில்லையா?" என்று ஏக்கத்துடன் கேட்டார் கோவர்த்தனன்.
பவானி இதற்கும் பதில் கூறாமல், "எனக்குப் புரியாமல் இருக்கும் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்" என்றாள். "உமாகாந்த் பாங்கில் கொள்ளை அடித்தார் என்பதை என்னிடம் வேணுமானால் உங்கள் அப்பா மறைக்கலாம். ஆனால் ஒரு பெரிய பாங்குக் கொள்ளையை எப்படி உலகின் பார்வையிலிருந்து மறைப்பது? பத்திரிகைகள், ரேடியோ எதிலுமே அப்படி ஒரு செய்தி இடம் பெற வில்லையே?"
"என் அப்பாவுக்குக் கல்கத்தாவில் இருந்த செல்வாக்கு உனக்குத் தெரியாது பவானி. இந்தச் செய்தி பத்திரிகைகளுக்கு எட்டவே இல்லை. போலீசுக்குச் சில பத்திரிகை நிருபர்கள் ஃபோன் செய்து கேட்டபோது அவர்கள் கேள்விப்பட்டது வதந்தியாக இருக்கும் என்று போலீஸார் கூறிவிட்டனர். ஏன் தெரியுமா? போலீஸ் ஐ.ஜி.யிடம் விஷயத்தைப் பத்திரிகைகளுக்கு வெளியிட வேண்டாம் என்று என் அப்பா கேட்டுக் கொண்டார். அவரும் சம்மதித்து அப்படியே உத்தரவு பிறப்பித்து விட்டார். பாங்கு நிர்வாகிகளும் விஷயம் வெளியாவதை விரும்ப வில்லை. அவர்களுக்கென்னவோ பணம் திரும்பக் கிடைத்து விட்டது. திருடனும் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். பத்திரிகையில் செய்தி வெளியானால் பாங்குக்கு வீணான அவப் பெயர்தானே? எனவே, விஷயத்தை அமுக்கிவிட்டார்கள். மாஜிஸ்திரேட் கோர்ட்டில்