கொள்ளணும். பொருள்களை வீடு வாசலைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக் கொள்ளணும் அதுதான் முக்கியம். நீ படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல். நீ ஒன்பதாவது பத்தாவது படித்தால், மாப்பிள்ளை பி.ஏ., எம்.ஏ., படித்தவனாகப் பார்க்கணும். அவன் தலையோ ஆகாசத்திலே பார்க்கும். தாட் பூட் என்பான். நம் இனத்திலே நம் வட்டாரத்திலே அப்படி எவன் இருக்கிறான்? எங்களுக்கு அல்லவா தெரியும், இந்தத் தொல்லை எல்லாம்? எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன் அக்கா. நீ வேணுமானால் சொல். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால், நாளைக்குக் கொண்டு போய்ப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவேன். இன்னொன்றும் சொல்லிவிட்டேன். இந்த வருசம் மட்டும்தான் படிக்க வைப்பேன். சந்திரன் எஸ்.எஸ்.எல்.சி. தேறி விட்டானானால், அப்புறம் இங்கே ஒரு குடும்பம் இருக்காது. நீயும் இங்கே படிக்க முடியாது. இந்த வருசம் மட்டும் படித்துவிட்டுச் சந்திரனோடு வீட்டுக்கு வந்து விடணும்" என்றார்.
"சரிதானே அம்மா?" என்று மகளைப் பார்த்துக் கேட்டார். அவளுடைய குரல் கேட்கவில்லை. ஒருகால், தலை மட்டும் அசைத்திருப்பாள்.
"சரி. இருந்து போகட்டும் எனக்கும் ஒரு துணை ஆச்சு" என்றார் அத்தை.
என் உள்ளம் குளிர்ந்தது. வந்தது தெரியாமல் திரும்பிவிட்டேன்.
மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத அன்போடு பழகியது போல் அவர்களால் பழக முடியவில்லை. சில நாட்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே முன்னும் பின்னுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். "பெண்களே, இப்படித்தான். அடிக்கடி சண்டை போடுவார்கள். முறுக்கிக் கொள்வார்கள்" என்றான் சந்திரன்.
அடுத்த மாதத்தில் வேலூரிலிருந்து என் அத்தையும் அத்தை மகள் கயற்கண்ணியும் மகன்