"பழகலாம். அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நாமும் அப்படிக் கவலைப்படாமல் இருந்தால் சரிதான்."
"அவள் நல்ல பெண்."
"நல்ல பெண்ணாக இருந்தும் சந்திரனுடைய மனத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. அதனால் நீயும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். சந்திரன் போல் கலங்கிவிடாதே."
"சே! என்ன பேச்சு பேசுகிறாய்?"
"ஒன்று கேட்கிறேன். உனக்கு அழகுணர்ச்சியே இல்லையா?"
"கொஞ்சம் குறைவுதான். அதுவும் எனக்கு நன்மைதான். சந்திரனைப் போல் எனக்கு அழகும் இல்லை; அழகுணர்ச்சியும் இல்லை. பெண் வேடத்தோடு நடிக்கப் போவதும் இல்லை, பெண்ணின் அன்பால் கலங்கப்போவதும் இல்லை."
"அழகுணர்ச்சி இல்லாத வாழ்வு என்ன வாழ்வு?"
"அது சீர்கெட்ட மட்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு வாழ்வாக இருக்கிறது அல்லவா? அதுவே போதும். வாழ்வே அடியோடு கெட்டு அழிவதைவிட ஏதோ ஒரு வாழ்வு இருப்பது மேலானது."
பிறகு, சாப்பிடப் போகலாம். வா" என்று உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.
மறுநாள் காலையில் அவனும் நானும் ஒரே ரயிலில் ஏறினோம். அவன் அரக்கோணத்தில் இறங்கிவிட்டான். நான் வாலாசாவில் இறங்கி வீட்டுக்குச் சென்றேன்.
வீட்டாருக்குச் சந்திரனைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை. செய்தியைச் சொன்னபோது