பெண்ணை அழைத்து வந்த போதே சீற்றத்தோடு பேசத் தொடங்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ண மறுத்துவிட்டனர். குழப்பக்காரரில் ஒரு சிலர் நன்றாகக் குடித்திருந்தனர். அதை நான் முதலில் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கன்னா பின்னா என்று பேசத் தொடங்கியபோது நான் சமாதானம் செய்ய விரும்பி மெல்ல நெருங்கி ஒன்று இரண்டு சொன்னேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னைக் கைப்பற்றி இழுத்து, "என்ன தம்பி! நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே! குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா?" என்றார். "அப்படியா?" என்று திகைத்து நின்றேன். "கிட்டே போனால் சாராய நாற்றம் மூக்கைத் துளைக்கிறதே, தெரியவில்லையா?" என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன். சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். "அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது? படிப்பும் இல்லை, பண்பும் இல்லை" என்றார்.
உள்ளூராரும் வெளியூராரும் சிலரும் சேர்ந்து கடைசியில் இரவு 11 மணிக்குப் பெண் அழைத்து வந்தோம். அதற்கு மேல் நாதசுரம் முழங்க, நலுங்கு வைக்கத் தொடங்கினார்கள். அந்தக் குடிகாரரில் இருவர் அங்கே வந்து உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களே வலிய வந்து பந்தலில் உட்கார்ந்து கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு நலுங்கு வைக்கப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆரத்தி சுற்றிச் சென்றார்கள். ஒருவர் வடக்குப் பக்கத்தே உட்கார்ந்து, நலுங்கு வைத்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இளம் பெண்கள் இருவர் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். பாட்டும் நாதசுர இசையும் மாறி மாறி அமைந்து கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரருமாகக் கலந்து நலுங்கு வைத்துச் சென்றார்கள். அம்மா நலுங்கு வைக்க முன் வந்ததைப் பார்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற்பட்டது. அம்மா சந்தனத்தை எடுத்து மணப்பெண்ணின் முகத்திலும் கைகளிலும் தடவிவிட்டு ஆரத்தி சுற்றத்தொடங்கியபோது, "போதும் அம்மா! ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்" என்றார் ஒருவர். இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது" என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், "அது என்ன வழக்கம்? சாதியில் இல்லாத