வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம்! எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே! முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்" என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். "முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்" என்று மீசையை முறுக்கிக்கொண்டு எழுந்தார்.
"இன்னும் ஒருத்தர் நலுங்கு வைத்து முடித்துவிடலாமே. இந்தச் சின்ன வேலைக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சும் குழப்பமும்?" என்றேன்.
பக்கத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, "நீ சும்மா இரு. தம்பி! உனக்கு என்ன தெரியும்? வெற்றிலை பாக்குக் கொடுத்து வருபவர் பெரிய மனிதர். அவர் சொல்கிறார் ஒன்பது பேர் ஆகிவிட்டது என்று, இப்போது இன்னொருவர் வந்து நலுங்கு வைத்தால் பத்து ஆகிவிடுமே! எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா?" என்றார்.
மணப்பந்தல் முழுவதும் ஒரே குழப்பமாக மாறிவிட்டது. எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒவ்வோர் அதிகாரத்திலும் அவர் பத்துப் பத்துக் குறள் பாடியிருப்பதும் நினைவுக்கு வந்தது. "எட்டு, பத்து எல்லாம் நல்ல எண்கள்தானே? ஒன்பதாக இருந்தால் என்ன? எட்டு அல்லது பத்தாகவே இருந்தால் தான் என்ன?" என்றேன்.
பக்கத்தில் இருந்தவரின் முகம் மாறியது. "நீ சும்மா இருப்பா, இந்தக் காலத்தில் இளம்பிள்ளைகளே இப்படித்தான். கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் நீங்கள். உங்களுக்கு எட்டு, பத்து எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நாளைக்கு இதனால் ஏதாவது கேடு வந்தால் யார் முன்வந்து காப்பாற்றுவார்கள்? செய்கிறவர்கள் சரியாகச் செய்வதுதானே? செய்யத் தெரியாவிட்டால், எங்கள் வீட்டிலே கலியாணம் என்று ஏன் பெருமையோடு ஒப்புக்கொண்டு வந்தீர்கள்?" என்றார்.
குடிகாரனின் மனநிலை மயங்கியது போலவே, அவருடைய மனநிலையும் மயங்கியிருந்ததை உணர்ந்ததும் பேசாமல் அமைதியானேன். மூட நம்பிக்கையும் ஒருவகைப் போதைப் பொருள் என்பது முன்னமே தெரியும். நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கெடுப்பதற்கு