அவர்கள் திடுக்கிட்டார்கள். "நல்ல பையன்! எவ்வளவு அக்கறையான பையன்! அவனா அப்படிப் போய்விட்டான்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இமாவதியைப் பற்றியோ, காதலைப் பற்றியோ நான் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.
நான் போய் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், பாக்கிய அம்மையார் வீட்டுக்கு வந்தார். "தம்பி எப்போது வந்தது?" என்றார். "இப்போதுதான்" என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, "அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்!" என்றார். உடனே போய்விட்டார்.
சந்திரனுடைய ஊர்க்குப் போய் அவனுடைய பெற்றோர்க்கும் அத்தைக்கும் ஆறுதல் சொல்லி வரவேண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். விரைந்து திரும்பி வருமாறு சொன்னார்கள்.
பெருங்காஞ்சியில் நான் சென்று கண்ட காட்சி துயரவடிவாக இருந்தது. அந்தப் பெரிய வீடு இழவு வீடுபோல் இருந்தது. சாமண்ணா மூலையில் ஒரு கட்டிலிலேயே ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் கழித்தார். சந்திரனின் தாயோ, தேங்காயும் வெல்லமும் இருந்த அறையில் ஓர் ஓரமாகப் பாயும் தலையணையுமாகக் கிடந்தார். அத்தை மட்டும் சமையலறைக்கும் வாசலுக்குமாகத் திரிந்துகொண்டிருந்தார். கற்பகமும் வாடிய கொடிபோல் இருந்தாள். சமையலறையில் உறவினரான ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருவரும் அழத் தொடங்கினார்கள். அத்தையின் கண்ணீர் என்னை உருகச் செய்தது. சாமண்ணாவின் பெருமூச்சு வேதனை தந்தது. சந்திரனுடைய தாயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.
வேலைக்காரன் மாசன், தோட்டக்காரன் சொக்கான், முதல் வருவோர் போவோர் வரையில் அத்தனை பேரும் என்னிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருக்க இருக்க, அவர்கள் கேட்ட கேள்விகள் எனக்குச் சலிப்பையும் தந்தன. திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளையே கேட்டு என்னை வாட்டினார்கள். தலைமையாசிரியர் ஒருவர்தான் பயனுள்ள வகையில் பேசினார். 'இப்படிக் காணாமல் போனவர்களைப் பற்றிச் செய்தித்தாளில் படம் போட்டு அறிக்கை வெளியிடுகிறார்களே, அதுபோல் செய்யலாம்' என்றார். எனக்கும் அது