மூடநம்பிக்கையும் கள்போல் எவ்வளவு பயன்படுகிறது என்பதை அன்று உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிறகு உரத்த குரலில் பேசி எல்லாரையும் அமைதிப்படுத்தி, வெற்றிலை பாக்குக் கொடுத்தவர் சொல்லும் எண்ணையே எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாவே கர்ப்பூரம் ஏற்றிப் பெண்ணின் நலுங்கை நிறைவேற்றவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொல்லி முடித்தவுடன், "அதுதான் சரி" என்றும் "அப்படியே செய்வோம்" என்றும் நாலைந்து பேர் உரக்கச் சொன்னார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்பாவின் திறமையால் அமைதி ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. மணி பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. பேசிப் பேசிக் களைத்துப் போன காரணத்தால், எப்படியாவது முடியட்டும் என்று சோர்ந்துதான், அப்பாவின் தீர்ப்பை ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். நானும் களைத்துப் போனேன். உடம்பின் களைப்புக்கும் காரணம் இல்லை. உள்ளத்தின் சோர்வால் உடம்பும் சோர்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்தேன்.
மறுநாள் காலையில் திருமணப் பந்தலுக்குப் போன போதுதான் மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. முந்திய நாள் கவிழ்ந்த முகத்தையே பார்த்தேன். விளக்கொளியில் பார்த்த காரணத்தால் உண்மையான அழகும் தெரியவில்லை. திருமணத்தன்று காலையில் பந்தலைச் சுற்றி வந்தபோது மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்த்தேன். முகத்தில் அவ்வளவாக கவர்ச்சி இல்லை. மாநிறமான பெண்கள் பலர் எவ்வளவோ கவர்ச்சியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும் காணப்படவில்லை. மூக்கு அளவாக அமையவில்லை. உருண்டு திரண்ட அந்த மூக்கின் கொடியவடிவம் முகத்தின் அழகையே கெடுத்துவிட்டது. கன்னங்களில் தசைப்பற்று இல்லை. ஒரு பெண்ணின் இளமைக்கு அழகு செய்யும் சிறு நெற்றி இல்லை. ஆண்களுக்கு இருப்பது போன்ற பரந்த பெரிய நெற்றி இருந்தது. இவை எப்படியாவது போகட்டும் உடுத்திருந்த உடையிலாவது, அணிந்த நகைகளிலாவது அழகைக் கூட்டியிருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. ஆடம்பரத்தைப் புலப்படுத்தும் முயற்சி இருந்ததே தவிர அழகை எடுத்துக் காட்டும் முயற்சி இல்லை. பொன்னிறப் பட்டுச் சேலையும் சரிகை மிகுந்த சோளியும் மணமகள் உடுத்திருந்தாள். கோயிலில் சாமியின் அழகு புலப்படாதபடி - மார்பும் கழுத்தும் கைகளும் தெரியாதபடி - நகைகளால் மூடி மறைப்பது போல் அந்த மணமகளைப் பலவகை அணிகலன்களால் - காசுமாலை முதல் சிலவகைப் பதக்கங்கள் வரையில் - எல்லாவற்றையும் அணிவித்துப் - போர்த்திருந்தார்கள் என்று