மெல்லத் திறந்து ‘சத்தம் போடாத... மருந்து வாங்கிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு, யாரோ கீழே உருட்டி விட்டது போல் படி வழியாய் ஓடினாள். நல்லவேளை... அப்போதுதான் மருந்துக்கடை பாதி மூடப்பட்டது. அந்தக் கடை அந்த மருத்துவமனை டாக்டர்களின் சீட்டுக்களிலில்லாமல், மருந்து மாத்திரை கொடுக்காத கடை. ஆனாலும், இவள் கெஞ்சிய கெஞ்சலில், டிஞ்சரைக் கொடுத்தது. வெட்டுக் காயம் என்றவுடன், தன்னை டாக்டராக அவள் அங்கீகரித்துவிட்டதாகக் கருதி, கடைக்காரர், நான்கைந்து மாத்திரைகளைக் கொடுத்து, எந்த வேளைக்கு எது என்று விளக்கினார். பிதுக்கினால் பிசின் மாதிரி வரும் ஒரு டியூபையும் கொடுத்தார். அவள் மூன்று பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டி எட்டு ருபாயைத் திரும்ப வாங்கிக் கொண்டு, மலை ஏறுவதுபோல் படியேறினாள். மூன்று மூன்று படிகளாக அவள் தாவிக் குதித்ததால், மாடி முனைக்கு வந்ததும், அவளால் நகர முடியவில்லை. மூச்சு முட்ட அறைக்குத் திரும்பினாள். அவனோ, முட்டிக் காலில் கை ஊன்றித் தலையை அந்தரத்தில் தொங்க விட்டு அசைவற்று இருந்தான்.
அந்தப் பெண் அவனைத் தூக்கி நிறுத்தினாள். உடம்பு முழுவதற்கும் அந்த ஒரு பாட்டில் டிங்சர் அயோடின் தேவையாக இருந்தது. பஞ்சு அதை முழுமையாக உறிஞ்சிவிட்டது. அவன் காயங்கள் அந்தப் பஞ்சு ஈரத்தை அடியோடு வாங்கிக் கொண்டன. அவ்வப் போது அவன் வலி பொறுக்காமல் துடித்தான். அவனை அறியாமலே ‘எம்மா, எப்பா’ என்ற வார்த்தைகள் வந்தன. அவன் அவற்றையும் கடித்துக் கொண்டான். நிறுத்திக் கொண்டான்.
இதற்குள், அந்தப் பெண் அவனுக்கு ஒரு மாத்திரையைக் கொடுத்துவிட்டு, அவனைக் கட்டிலில் கைத்தாங்கலாகக் கிடத்தினாள். பிசின் மருந்தைப் பிதுக்கி, அதை அவன் ரத்தச் சதைகளுக்கு வெள்ளைக் கொப்பளங்கள் போலாக்கி, தடவிவிட்டாள். பிறகு வாயைக் கைக்குக் கொண்டுபோய் அந்தக் கை வழியாய்ப் பேசுவதுபோல் பேசினாள்.
“ஒன்ன எந்தப் பாவிடா இப்படிப் பண்ணுனது... அவன் வீட்லயும் ஒரு பொட்டை விழும். வேணுமுன்னாப் பாரு...”
அவன், தலையைத் தூக்கப் போனான். ஏதோ பேசப் போனான். அவள் ஒரு கையை அவன் தலையில் வைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அவன் உதடுகளை ஒட்ட வைத்தாள். தலையணையை எடுத்து அவன் தலைக்கு அணையாக்கினாள். பின்னர், அந்தத் தலையைத் தன்பக்க மாகத் திருப்பி வைத்துக்கொண்டே சில கேள்விகள் கேட்டாள்.