அந்தப் பெண் கண் விழித்தாள். தன்னை மறந்து அவளையே பார்த்த சுயம்புவிடம் நாத்துடிக்க பேசினாள்:
“மகளே, மகளே... நீ பட்டது போதும் மகளே... இந்த தாய்கிட்ட ஒன் சுமையைக் கொடுத்துடு மகளே... என் சுமை ஒனக்கு வேண்டாம். ஆனால் ஒன் சுமை எனக்கு வேணும்... நெல்லுல சாவியாகி, முட்டையில கூமுட்டையாகி ஆணுலயும் சேராமல், பெண்ணுலயும் சேர்க்காமல் அலியாப் போன ஒன்னோட கதையை சொல்லு மகளே. தாய்கிட்டச் சொல்லாம யார்கிட்ட சொல்லுவே மகளே! சொன்னாத்தானே மகளே. பாரம் தீரும்... வாய் வழியாத் தானே அந்தப் பாரத்தை நானும் வாங்கிக்கொள்ள முடியும்...”
சுயம்பு மெள்ள மெள்ளப் பூ விரிவது போல் தனது கதையை சொல்லப் போனான். குரலில் கவலை வந்தாலும், கண்ணில் நீர் வரவில்லை. இந்த அம்மா பார்த்துக் கொள்வாள் என்பது மாதிரியான நம்பிக்கை. சொன்னான் - சொன்னான் - அப்படிச் சொன்னான்... சுவர்க்கடிகாரம் மும்முறை வேறுவேறு விதமாய் அடிக்கும் வரை சொன்னான். அவள், அவன் உணர்ச்சிப் பெருக்கான சமயங்களில் சிறிது நேரம் பேசவிடாமல் தடுத்தாள். அவன் பத்து வயதிலேயே லேசு லேசாய் எட்டிப் பார்த்த பெண் போக்கை வென்றெடுத்த வீரத்தைச் சொன்னான். பிளஸ்டூவுக்கு வந்தபோது பாதி உணர்வுகளை ஆக்கிரமித்த பெண்ணாகிய பேருணர்வு பதுங்கிப் பாயும் புலியாகி, பொறியியல் கல்லூரிக்குப் போன ஒரு மாத காலத்திற்குள்ளேயே தன்னைக் கவ்விக் கொண்டதை - அந்த ரத்தப்பசி தாகம் அடங்காமல் அக்காவையும் கொல்லாமல் கொன்று போட்டதை அழுதழுது சொன்னான். இப்போது அவளும் அழுதாள். அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டே ஓலமிட்டாள்.
“நானாவது தற்குறி மகளே! பிறக்கும்போதே வயலுல புரண்டவள் மகளே! ஆனால் நீ படிச்சவள். என்ஜினிய ராக கனவு கண்டிருக்கே.கண்ட கனவு பலிக்கலையே. இந்த நாட்ல, காது கேளாதவனுக்கு சைகை சொல்லி விளக்குறாங்க. கண்ணில்லாதவன் கையப் பிடிச்சு வழி காட்டுறாங்க... ஆனா நம்பள மாதிரி பொட்டைங்கள கடிச்சுக் குதறுறாங்களே மகளே. ஒன்ன எப்படித்தான் வாழவைக்கப் போறேனோ! இந்த அம்மா உயிரோட இருக்கது வரைக்கும் ஒன்ன கண்கலங்க வைக்கமாட்டேன் ராசாத்தி... கண்ணீரத் தொடடி என் கண்ணே...”
அந்தப் பெண்ணே இப்போது சுயம்புவிற்காக கவலைப்படுவது போலிருந்தது. ஆனாலும் அந்த