“ஒன் புருஷன் கூத்தாண்டவர் எங்க இருக்கார்...”
“கல்லாய் இருக்கார். கட்டையாய் இருக்கார். கூவாகத்துல இருக்கார். பிள்ளையார்குப்பத்துலயும் இருக்கார். இதெல்லாம் ஒரு நிமிஷத்துல சொல்ல முடியாத சங்கதி என் மகளே... ஒரு தடவை நீ என்ன அம்மான்னு கூப்பிடுடி. அப்பதான் நீ என்ன ஒப்புக் கொண்டதா அர்த்தம்டி..”
“மாட்டேன்கா... எனக்கு அம்மா பிடிக்காது. அவள் தானே என்ன இப்படி பெத்துப் போட்டுட்டாள்.”
“கூத்தாண்டவர், பெண் கேட்டா அவள் என்னடி செய்வாள்... எங்கம்மா, என்னப் பார்த்து துடிச்சது மாதிரிதான் அவளும் துடிச்சிருப்பாள். ஆனாலும், எப்படியோ என் கூட்டுல தூக்கிப் போட்ட குயிலு முட்டை நீ. ஒன்ன அடைகாத்து ஆயுள் வரைக்கும் பராமரிக்க வேண்டிது, என்னோட பொறுப்பு!”
“அப்படின்னா...”
“நான் ஒனக்கு அம்மான்னா அம்மாதான். நாம எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம்! ஒரே பாயில தான் படுப்போம். ஒரே தட்டுலதான் சாப்பிடுவோம்... நீ என்ன அம்மாவா பார்த்துக்கணும். நான் ஒன்ன மகளா நடத்தணும். கூத்தாண்டவரே, கூத்தாண்டவரே, ஒனக்கு பொண்ணு கிடைச்சது போதாதா. இன்னுமாய்யா ஒனக்கு ஆசை தீரல. இந்த சின்னப் பனங்குருத்த இப்படி கோர ஓலையா ஆக்கிட்டியே, ஆக்கிட்டியே...”
“எனக்கு எதுவுமே புரியமாட்டேக்கு அக்கா...”
“இன்னுமாடி நான் ஒனக்கு அக்கா... கடைசியா கேக்கேன் என் மவளே. என்னை இந்தக் கணத்திலேருந்து அம்மான்னு கூப்பிடணும்... ஆனாலும், நான் ஒன்ன வற்புறுத்த மாட்டேன். பச்ச பனந்தோப்புல இடி விழுந்த மரமா நிற்கிற இந்தப் பாவிய அம்மான்னு சொல்லுறதும் சொல்லாததும் ஒன்னோட இஷ்டம்...”
அந்தப் பெண், இப்போது பேச்சடங்கி உட்கார்ந்தாள். பிறகு மடியில் கிடந்த சுயம்புவின்