இதற்குள் அவள் மீண்டும் உள்ளே வந்தாள். சுயம்புவை அதிசயித்து பார்த்துவிட்டு அப்படியே கட்டி அணைத்தாள். கை வளையல்களில் சிலவற்றைக் கழற்றி, அவன் கைகளில் மாட்டினாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். உடனே அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு தட்டுமுட்டு சாமான்களை எடுக்கக் கீழே குனிந்தான். அவள் பரவசப்பட்டு, “மகளே! மகளே!” என்று அவளைச் சுற்றிச் சுற்றி அரற்றினாள்.
தாய்க்காரி டிரங்க் பெட்டியைத் தூக்கிப் போனாள். பிறகு அந்தத் தகுதி மகளுக்குத்தான் உண்டு என்பதுபோல், அதைச் சுயம்புவிடம் நீட்டினாள். பிறகு தன் கொண்டை மாதிரி உள்ள சாக்கு மூட்டையின் முனையைப் பிடித்துத் தூக்கிக்கொண்டாள். இருவரும் ஒசைப்படாமல் படியிறங்கினார்கள். ஒரு சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்து பஸ் நிலையம் வந்தார்கள். திருவள்ளுவர் பேருந்து போர்டும், அதன் படமும் தொங்கிய இடத்தருகே வந்தார்கள். பெண்கள் கூட்டத்தில் சந்தேகம் வரவில்லை. ஆனால், சில சில்லறைப் பயல்கள் சுற்றிச்சுற்றிச் வந்தார்கள். தாய்க்காரி சுயம்புவை எச்சரித்தாள்.
“ஒன் தலை ஒரு மாதிரி இருக்கதைப் பார்த்துட்டு அந்தப் பயலுவ கண் சிமிட்டுறானுவ பாரு... தலையில முக்காடு போட்டுக்கடி என்ன அதிசயம் பாரு... ஆம்பள உடையில் இருந்தால், ஒனக்குக் கஷ்டம்... பொம்பள உடையில இருந்தால் அவனுவளுக்குக் கஷ்டம்... காலை கைய நல்லா.நீட்டிப் படு மவளே... திருவள்ளுவர் பஸ்கூட லேட்டா வருமாம்... ஏதோ இந்தி - எதிர்ப்பாம்... நாம என்ன கோட்டைக்கா போறோம். கழுதப் பய பஸ்ஸு எப்ப வேணுமுன்னாலும் வந்துட்டுப் போகட்டும்.” சுயம்பு முக்காடிட்டு அப்படியே அற்றுப் போனான். இதற்குமேல் எதுவும் இல்லை என்பது மாதிரி ஒரு சுமை வரும்போது வருமே ஒரு தூக்கம் அப்படிப்பட்ட பெருந் தூக்கம். கண்ணிமைகளை இருபுறமும் இழுத்துப் பிடிக்கும் தூக்கம்.
இரவில் அப்படி அப்படியே நின்ற பஸ்கள், அந்த பஸ் நிலையத்திற்கு விடியலைக் காட்டும் சேவல்கள் போல் கொக்கரக்கோ போட்டன. அவளுக்கு சுயம்புவின் பெருந் தூக்கத்தைக் கலைக்க மனம் வரவில்லை. முகத்தைக் கழுவி விட்டு திருவள்ளுவர்காரனிடம் இரண்டு டோக்கன்களை வாங்கிக்கொண்டாள். ஒரு தேனிர் கடைப்பக்கம் போன போது, சுயம்புவும், அவளோடு சேர்ந்து கொண்டான். மகளிர் பக்கம் போனால் பெண்களின் கூச்சல், சுயம்பு ஒசைப்படாமல் ஒரு புதர்ப்பக்கம் போனான். அப்படியும் இப்படியுமாய் காலை மணி ஒன்பதைத்