சுமையிலும் ஒரு சுவை இருப்பதுபோல் நகத்தைக் கடித்தாள். இப்போது சுயம்புவே நிலமையை விளக்கினான்.
“எக்கா... இல்ல...இல்ல... அம்மா... ஒருவேள எங்க அண்ணனும், எங்கப்பாவும் என்னத் தேடி வரலாம். அவங்க மனசும் ஏழை. ஆனாலும் எனக்கு அவங்ககூட போக இஷ்டமில்ல, ஒன்கூடத்தான் வருவேன்...”
“இந்த வார்த்தை கேட்க என்ன தவம் செய்தேனோ? நீ சொல்றதும் ஒரு வகையில சரிதான் மகளே. பேசாம பஸ் ஸ்டாண்டுக்கு போயிடலாம் மகளே... இனிமேல் காலைலதான் பஸ் கிடைக்கும். ஆனாலும் இப்பவே போயிடலாம் மகளே! ஒன் ரூமுல போயி எடுக்க வேண்டியதை எடுத்துக்கடி!”
“ஒரு துரும்பக்கூட எடுக்கமாட்டேன்...”
“அதுவும் ஒரு வகையில சரிதாண்டி இதோ என் டிரங்க் பெட்டி இந்தா சாவி, எந்தப் பாவாடையை வேணுமுன்னாலும் எடுத்துக்கோ. எந்தச் சேலைய வேணுமுன்னாலும் கட்டிக்கோ. நான் கணக்கு முடிச்சுட்டு வர்றேன். என்னோட ஆஸ்பத்திரி கணக்க சொல்றேன்...”
“என்னோட கணக்கும்...”
“வேண்டாம். முடிக்க வேண்டாம். காசுக்காக சொல்லல. ஆனா, அதுவும் முக்கியம்தான். எங்கப்பா குதிருக்குள்ள இல்ல என்கிற மாதிரி ஆயிடும். பழைய கணக்கை மறந்துடு, புதிய கணக்கை துவக்கலாம். கதவை சாத்திக்கோ. கட்ட வேண்டிய புடவய கட்டிக்கோ. அம்மா ஒரு நொடியில, வந்துடறேன்...”
அவளோ அல்லது அவனோ அல்லது அதுவோ வெளியேறியதும் சுயம்பு ரத்தச் சேறான பேண்ட், சட்டை களைக் கழற்றி, அவற்றை ஒரே சுருட்டாய் சுருட்டி, ஒரு மூலையில் எறிந்தான். பிறகு எறிந்ததை எடுத்து தலைக்கு மேல் மூன்று தடவை சுற்றி அவற்றின்மீது காரி துப்பினான். துப்பி துப்பி அவற்றை வீசி கடாசிவிட்டு அந்த டிரங்க் பெட்டியைத் திறந்தான். அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட சேலைகளை எடுத்துக் கீழே போட்டான். ஒரு வெளிர் மஞ்சள் புடவை கிடைத்தது. கூடவே அதே நிற ஜாக்கெட். பெண்ணாகி விட்டான்.