முற்றத்தில் நின்ற மோகனா, தன்னையே சுமக்க முடியாதபடி உள்ளே போனாள். அண்ணனுக்கு, மலர் எழுதிய கடிதத்தை இவளும், இவள் அண்ணனைத் துரத்தியதை அவளும் மூச்சு விடக்கூடாது என்று ஒரு ஏற்பாடு. ஆனால், இப்போது அண்ணன் போன திசையைச் சொல்லிவிடலாமா என்று ஒரு ஆவேசம். பாதி ரத்தப்பாசம். மீதி எந்த அண்ணனால் தன்னை வெறுத்தானோ அந்த “அத்தான்.” இப்போது அண்ணனாகி விட்டான். முறைக்கு அத்தை மகளான மலர்க்கொடியை சினிமாவுக்குக் கூட்டிப்போய், இவளை தங்கையாக்கி விட்டான். மலர்க்கொடி... நீ உருப்படுவியாடி... எங்க அண்ணன் சேல கட்டுன ஜோக்கரு. ஒன்ன ஏமாத்துனதா நினைச்சு... நான் கலியாணம் பண்ணிக்கப் போறவன் கிட்டயே அவன் யாருன்னு சொல்லி என் காதலைக் கலைச்சிட்டியே... ஒனக்கும் ஒருத்தி வருவாடி.
மோகனா சிரத்தையோ சுரத்தோ இல்லாமல் அந்தப் பெண்ணுக்கு மோரைக் கொடுத்தபோது மெல்லக்கூடச் சிரிக்கவில்லை. பிள்ளையார் கேட்டார்.
“பாப்பா யாரு...”
அவ்வளவுதான். அந்தப்பெண் தலையே வெடிப்பது போல் ஏங்கினாள். பிறகு அழுவது நாகரிகமில்லை என்பது போல், மெல்ல எழுந்து, அங்குமிங்குமாய் நடமாடினாள். மீண்டும் உட்கார்ந்து அழுகைக் குரலோடு பேசினாள்.
“நான்தான் ஒங்க மகன் யுனிவர்சிட்டியை விட்டு விலக்கப்படுறதுக்கு காரணமான பாவி... ஆத்திரத்துல அவர அடிச்சது மட்டுமில்லாம, புகார் கொடுத்து சில அயோக்கியப் பயல்களுக்கு கையாளாயிட்டேன்... டேவிட்டு ஒங்க பையனோட நிலமையைச் சொன்னதும், என்னால தாங்க முடியல... ஒங்க காலுல... கா...”
பிள்ளையார் ஓடிப்போய் நின்றுகொண்டு, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
“அழாதம்மா... நீ காரணமா இல்லாட்டாலும், வேற யாராவது காரணமா ஆயிருப்பாங்க... அப்படியே இல்லாட்டாலும், அவனால அங்க நீடிச்சிருக்க முடியாது. நீ வந்ததுல ஒரு சந்தோஷம். நீ அழுகிறதுலகூட ஒரு ஆனந்தம். ஏன்னா, நீங்க வாரது வரைக்கும் நாங்க அனாதை மாதிரியே தவிச்சோம்... எம்மா... கோமளம் சட்டுப்புட்டுன்னு சோறு பொங்கும்மா...”