எல்லோரும் பிரமித்து நின்றபோது, வைக்கோல் படப்பு பக்கத்தில் ஒரு சத்தம் கேட்டது. அங்கே நின்றபடியே கோமளம் அறிவித்தாள்.
“சாப்பாடு ரெடி...”
“அய்யய்யோ... வேண்டாமுன்னு சொன்னேனே.”
“நீங்க சொன்னா நான் கேட்கணுமா... எழுந்திரிங்க”
எல்லோரும் எழுந்தபோது, அவர்களோடு சேர்ந்து எழுந்த ஆறுமுகப்பாண்டியின் மனதுக்குள் ஒரு விபரீத சந்தேகம். தம்பி, சேலை கட்டிய நாளிலிருந்து தன்னையும் ஒரு பேடியாகவே நினைக்கும் இந்தக் கோமளம், டேவிட்கிட்ட பேசும்போது எப்படிக் குழைகிறாள். ஆரம்பத்துல என்கிட்டக் குழைஞ்சாளே அதேமாதிரி. எதையாவது கிண்டலா சொல்லிட்டு, முகத்தை எங்கேயோ திருப்பி வைத்துக்கொண்டு, அங்கிருந்தே காக்காப் பார்வையாய் பார்க்கும் நளினம். நளினமாவது மண்ணாங்கட்டியாவது வேசித்தனம்...
ஆறுமுகப்பாண்டி அவர்களோடு சேர்ந்து சாப்பிட வில்லை. அந்த நிலமையிலும், கோமளம் நல்ல சாப்பாடாகவே போட்டாள். நன்றாகவே சிரித்துப் பேசினாள்.
எல்லோரும், மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தார்கள். பிரமிளா டேவிட்டிடம் ஏதோ சொல்ல, அவன் மரகதம் படுத்துக் கிடந்த அறைக்குப் போனான். சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், பாண்ட் பைக்குள் இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதியபடியே பேசினான். ஆறுமுகப் பாண்டியைத் தன் பக்கத்தில வரவழைத்த படியே சொன்னான்.
“உங்க தங்கை ரொம்ப வீக்கா இருக்காங்க... எங்கயாவது மருத்துவமனையில் சேர்த்து குளுகோஸ் ஏத்துங்க... கொஞ்சம் நடமாட முடிஞ்சதும் இந்த மருந்துகளைக் கொடுங்க... ஒங்க ஸிஸ்டருக்கும் உடல் நில பாதிச்சது மாதிரி மனநிலையும் பாதிச்சுடப்படாது. இது தூக்க மாத்திரை... ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒரு மாத்திரையாய், ஏழு நாளைக்குக் கொடுங்க...”