நீலாவும் விசுக்கென்று எழுந்தாள். ஆத்திரத்துடன் படுக்கையைக் கட்டிலிலிருந்து எடுத்துத் தரைமீது வீசி எறிந்தாள். தொடர்ந்து விளக்கும் அணைக்கப்பட்டது. புதிதாக மணமான தம்பதியின் அறையில் நிலவ வேண்டிய அழகும், ஆனந்தமும் அந்த இருளில் மூழ்கி, மறைந்து போயின.
-------
மறு தினம் பகல் கமலாவின் வீட்டிலிருந்து சிறிய கடிதம் ஒன்றை வேலைக்காரி காமுவிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அதில் 'அன்று மாலை தேநீர் விருந்துக்கு நீலாவும் சங்கரனும் அவர்கள் வீட்டிற்கு வரப் போவதாகவும், நெடு நாளாக நீலாவை அவள் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால் தவறாமல் மாலை வர வேன்டும்' என்றும் காமுவுக்கு கமலா எழுதி இருந்தாள், காமுவுக்கு நீலாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசை தான். ஏன், எதற்காக ஆசை எழுந்தது என்பதை அவளால் ஊகிக்க முடியவில்லை. கட்டாயம் போக வேண்டும் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டாள். அங்கே சங்கரனும் வருவார். அவரைப் பார்த்து, அவர் எவ்விதம் நடந்து கொள்வார் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் காமு. "ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன்பு பொன் மணியில் அன்பும், கருணையும் உருவாகப் பேசிய சங்கரனாக இருக்கிறாரோ? இல்லை, பணக்கார மனைவியைப் படைத்த பெருமையால் மாறிப் போய் இருக்கிறாரோ? அதையும் பார்த்துவிட வேண்டும்" என்ற உறுதியுடன், அன்று போகத்தான் வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டாள்.
மாலை நாலு மணி முதற்கொண்டே தலை வாரிப் பின்னி, பூச்சூட்டிக் கொண்டு அழகிய வாயில் புடவையை உடுத்திக் கொண்டாள் காமு. அவள் கண்களே அழகானவை. மேலும் அவைகளுக்கு அழகு செய்தது போல் மை தீட்டி பொட்டிட்டுத் தன் உருவததைக் கண்ணாடியில் பார்த்தாள். மெல்லிய கோடுகள் போட்ட வாயில் ரவிக்கை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது.அந்த ரவிக்கையைப் பார்த்ததும் இரண்டு, மூன்று மா தங்களுக்கு முன்பு நீலாவுக்காக அவள் தைத்துக் கொடுத்த பட்டுரவிக்கையின் நினைவு வந்தது அவளுக்கு.
அலங்கரித்துக் கொண்டு முடிந்ததும் தாபிடம் சென்று, “அம்மா! இன்றைக்கு நான் எங்கே போகிறேன் சொல் பார்க்கலாம்?'' என்று கேட்டாள் காமு.