அழைக்கிறாள், சாதாரண மாக நட்பு முறையில் அல்ல. 'தையற்காரி' என்கிற முறையில்! காமு துணி தைத்துக் கொடுத்து நீலாவிடம் கூலி வாங்கப் போகிறாள்!
சங்கரனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. "நான் வருகிறேன் அம்மா" என்று கமலாவுக்கும், காமுவுக்கும் சேர்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டுக் காரில் மனைவியுடன் போய் ஏறிக் கொண்டான்.
காமு தன் தோழியின் தோள்மீது ஆசையோடு கையைப் போட்டு அணைத்தபடி நீண்ட சாலையில் வேகமாகச் செல்லும் மோட்டாரைக் கவனித்தபடி நின்றாள்.
"கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலின்றி
நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே!"
என்று பாடிக் கொண்டே, தையல் இயந்திரம் கடகட வென்று ஒலிக்க ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள் காமு. கடைக்கு அன்று விடுமுறை ஆதலால் ராமபத்திர அய்யர் தினசரி ஒன்றைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். விசாலாட்சி மணைக்கட்டையைத் தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
சங்கரனை அன்று கமலாவின் வீட்டில் பார்த்த பிறகு காமுவின் மனம் ஒரு நிலையில் இல்லை. இவ்வளவு நாகரிகமும் டம்பமும் நிறைந்த மனைவியுடன் சங்கரனால் எவ்விதம் வாழ்க்கை நடத்த முடிகிறது? என்று திருப்பித் திருப்பி தன்னையே கேட்டுக் கொண்டாள் காமு.
தமிழ் நாட்டுப் பெண்களுக்குத் திடீரென்று பஞ்சாபி உடை மீது காதல் ஏற்படுவானேன்? தமிழ் நாட்டு உடை முறை நன்றாக இல்லையா? அழகிய கரை போட்ட பாவாடையும் தாவணியும் வயிற்றைக் குமட்டுகின்றனவா? கிள்ளு கிள்ளாகக் கொசுவம் வைத்துக் கட்டிக்கொள்ளும் பட்டு, நூல் சேலைகளைப் பார்த்தால வயிற்றைப் புரட்டு கிறதா? யாரைப் பார்த்தாலும், ஐந்து வயதுக் குழந்தையி லிருந்து இருபது. வயதுக் குமரி வரையில் பஞ்சாபி உடை அணிந்து உலாவுகிறார்களே! பஞ்சாப் சகோதரிகள் மீது நமக்கு ஒன்றும் கோபமில்லை. நீலாவின் அந்த 'பஞ்சாப்' நாகரிகம் காமுவுக்கு அருவருப்பாக இருந்தது. கர்னாடக மீனாட்சி மனுஷியான அம்மாளின் நாட்டுப் பெண் இவ்வளவு நாகரிகமாகவும், அதுவும் வடக்கத்திப் 'பாணி'யில் உடை