'சௌக்கியமா அப்பா? உன் மனைவியையும் அழைத்து வந்திருக்கிறாயா?" என்று அவனை விசாரித்தார் ராமபத்திர அய்யர்.
"சௌக்யந்தான் மாமா. நீங்கள் இங்கு வந்து ரொம்ப நாள். ஆகிறதாமே? வீட்டுப் பக்கம் வராமல் இருந்து விட்டீர்களே?"
காமு மிஷினை மூடி வைத்துவிட்டு எழுந்தாள், காபி போடுவதற்காக. "அப்பாவுடன் பேசிக் கொண்டிருங்கள். இதோ வந்து விட்டேன்" என்று சொல்லி விட்டுச் சமையல் அறைக்குள் சென்றாள்.
அடையாளம் தெரியாமல் உருமாறி, கூடத்து மூலையில் சுருட்டிப் படுத்துக் கொண்டிருக்கும் விசாலாட்சியைப் பார்த்ததும் சங்கரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளையே உற்றுப்பார்த்து விட்டு, "மாமி என்ன இப்படி இளைத்துப் போயிருக்கிறாள் மாமா? என்ன உடம்பு?" என்று விசாரித்தான்.
“ஏதாவது உடம்பு என்று தெரிந்தால் தானே, வைத்தியம் பண்ணுவதற்கு? கிராமத்தை விட்டு வந்த பிறகு இப்படி இளைத்துப் போய் இருக்கிறாள்” என்று கூறிவிட்டு, அப்பாவை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சர்மா என்னை நினைவு வைத்துக் கொண்டிருக்கிறானோ இல்லையோ என்று பேசாமல் இருந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு, ராமபத்திர அய்யர் சங்கரனைப் பார்த்தார்.
சங்கரனுக்கு அவர் தன்னைக் குத்திக் காட்டுவதாகவே தோன்றியது. இதற்குள் காமு இரண்டு டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து வைத்தாள். காபி சாப்பிட்டு முடிந்ததும் மேலும் அவருடன் என்ன பேசுவது, எதைப் பற்றிப் பேசுவது என்பது புரியாமல் திகைத்தான் சங்கரன். ராமபத்திர அய்யர் சிறிது யோசித்தபடி உட்கார்ந்திருந் தார். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவர்போல், 'சங்கரா! உன் மன்னி குழந்தையோடு பிறந்த வீட்டில் இருந்தாளே, அங்கே தான் இருக்கிறாளா, வந்து விட்டாளா?" என்று கேட்டார்.
"அவள் வந்து ரொம்ப நாளாச்சே! இங்கே தான் இருக்கிறாள். அவள் இராவிட்டால் அப்பாவுக்குச்