விசாலாட்சி குழி விழுந்த கண்களால் மகளைப் பார்த் தாள். எழிலோடு யௌவனத்தின் வாயிலில் பரிப்புடன் நிற்கும் அவளைப் பார்த்ததும் அவள் கண்களில் ஒளி வீசியது.
"அலங்காரமெல்லாம் பலமாக இருக்கிறதே, எங்கே போகிறாயோ? யாராவது சிநேகிதிக்குக் கல்யாணமாக இருக்கும்" என்றாள் விசாலாட்சி.
"இல்லை அம்மா! கமலாவின் வீட்டிற்குப் போகிறேன். அங்கே நமக்குத் தெரிந்தவர்கள் வருகிறார்கள். உனக்கும் அப்பாவுக்கும் கூடத் தெரிந்தவர்கள். நம் சங்கரனும், அவர் மனைவியும் கமலாவின் வீட்டிற்குச் சாயந்தரம் வருகிறார்களாம்" என்று கூறி முடித்தாள் காமு.
விசாலாட்சி, பெண் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்பதை அவள் முகபாவம் காட்டியது. "சீக்கிரம் வந்து விடு காமு. அப்பா கடையை மூடிக் கொண்டு வந்து விடுவார். சாதம் போட வேண்டும்" என்று கூறினாள்.
"எல்லா வேலைகளையும் செய்து விட்டேன் அம்மா! நீ எழுந்திருக்கவே வேண்டாம்" என்று சொல்லி விட்டு காமு கமலாவின் வீட்டிற்குப் புறப்பட்டாள்.
------
விசாலாட்சியின் உடல் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டு வந்தது. ஆயிரக்கணக்கில் அப்பளம் இட்டு, சலிக்காமல் வீட்டு வேலைகள் செய்து பழக்கப் பட்டவள். இன்று இரண்டு பேருக்குச் சமைப்பதற்குக் கூடக் கஷ்டப்பட்டாள். உடலில் சதைப் பிடிப்பு வற்றிப் போய் எலும்புக் கூடாக இருந்தாள். எடுத்ததற்கெல்லாம் 'பிலு பிலு' வென்று கணவனுடன் சண்டை பிடித்து வாதாடுபவள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று அடங்கிக் கிடந்தாள்.
அவளுக்கு நேர்மாறாக ராமபத்திரய்யர் பட்டினம் வந்த பிறகு திடமாக நோய் நொடி இல்லாமல் இருக்க ஆரம்பித்தார். வாழ்க்கை பூராவும் ஏழை உபாத்தியாயரை மணந்து கொண்டு, அவருடன் வறுமையில் வாடிய விசாலாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் மனம் கஷ்டப்படும். பணத்தைப் பணம் என்று பாராமல் பெரிய வைத்தியர்களிடம் அவளை அழைத்துச் சென்று காண்பித் தார். அவர்கள் அவளுக்கு வியாதி ஒன்றும் இல்லை யென்றும், குடும்பக் கவலையால்