அவள் மனம் இடிந்து மெலிந்து வருகிறாள் என்றும் கூறி விட்டார்கள்.
காமு கமலாவின் வீட்டை அடைந்த போது தெருவில் ஒரு அழகிய நீலவர்ணக் கார் நின்று கொண்டிருந்தது. மனம் படபடவென்று அடித்துக் கொள்ள காமு தயங்கிக் கொண்டே படி ஏறி உள்ளே சென்றாள். கூடத்தில் மேல் நாட்டுப் பாணியில் இல்லாமல் அழகிய ரத்தினக் கம்பளம் விரித்து, அதன் மீது சிற்றுண்டிகளும், டீயும் வைக்கப்பட் டிருந்தன. கமலாவின் நெருங்கிய நண்பர்களில் இரண்டு மூன்று பேர் வந்திருந்தார்கள்.
காமு உள்ளே நுழைந்ததும் கமலா அவசரமாக எழுந்து வந்து அவள் கைகளைப் பிடித்து உட்காரும் இடத்துக்கு அழைத்துப் போனாள். சங்கரனுக்கு எதிரில் காலியாக இருந்த இடத்தில் அவளை உட்கார வைத்தாள்.
சங்கரன் திகைத்துப் போனான்! கண் இமைக்காமல் காமுவைப் பார்த்தான். ஆனால், காமுவோ சங்கரனைத் தெரிந்த மாதிரியாகவே காட்டிக் கொள்ளவில்லை. இவள் தான் நீலா! காமு, நீ தைத்துக் கொடுத்த ரவிக்கை ரொம்ப ஜோராக இருக்கிறதாம். உன்னிடம் சொல்லும்படி என்னிடம் சொல்லி இருந்தாள்" என்று நீலாவை அறிமுகம் செய்வித்தாள் கமலா.
“ரவிக்கை சரியாக இருக்கிறதோ இல்லையோ என்று பல தடவை நினைத்துக் கொண்டேன்!" என்று கூறிவிட்டு காமு, நீலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். எந்த மோகனச் சிரிப்பையும், மருளும் கண்களையும் பார்த்து மயங்கித் தன் அந்தஸ்தையும் மறந்து பல உறுதிமொழி களைச் சொல்லிவிட்டு வந்து, பிறகு மறந்தானோ, அந்த சிரிப்பையும், மயக்கும் கண்களையும் பார்த்துத் தலையைக் குனிந்து கொண்டான் சங்கரன்.
காமு அவனை நேருக்கு நேர் சகஜமாகப் பார்த்தாள். பொன்மணியில் பார்த்த காமுவா அவள்? நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாமல் பரம சாதுவாக யாருடனும் எதுவும் பேசாமல் அடுப்பங்கரையில் பதுங்கிக் கொண்ட காமு இல்லை அவள். அவள் எல்லோருடனும் சகஜமாசுப் பேசுவதிலிருந்தும் பழகுவதிலிருந்தும் அவள் பட்டினவாசத்து நாகரிகத்தை அறிந்துக் கொண்டிருக்கிறாள் என்பது சங்கரனுக்குத் தெரிந்து போயிற்று. சிற்றுண்டி சாப்பிட்டு முடிகிறவரைக்கும் சங்கரன் அவளைத் தெரிந்து கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
எல்லோரும் கை அலம்பிவிட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்தபோது, காமு கொல்லைப் பக்கம்