உபாத்தியாயரும் இவன் தாயார் விஷயமாகப் போலீசாரிடம் தகவல் கொடுத்தார். கேசவன் வீட்டில் இருப்பதால் வாத்தியாருக்கு வேட்டி துவைப்பது, வென்னீர் விளாவுவது, கடைக்குச் செல்வது முதலிய வேலைகள் குறைந்தன. அவற்றைக் கேசவன் வெகு பக்ஷத்துடன் செய்துவந்தான். குருவின் பத்தினிக்கு கேசவனுக்கு உணவிடுவது, பெருத்த வெள்ளத்தில் செல்வம் அடித்துக்கொண்டு போய்விடுவது போலாய்விட் டது. அதை வெளியில் பலவிதத்தில் சொல்லியும் பார்த்தாள். உபாத்தியாயர் கேளாமையினால் அந்த அம்மாள் மிக்க கோபமடைந்து தினம் கேசவன்மீது ஒவ்வொரு குற்றத்தைச் சொல்வதும் அவனை வீட்டிலுள்ள பத்து பாத்திரங்கள் தேய்க்கவும், தண்ணீர் மொள்ளவுமான வேலைகளைச் செய்யச் சொல்லவும் ஆரம்பித்தாள்.
----
உத்தமனான கேசவன் இந்த கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் வெகு பொறுமையோடு செய்துகொண்டே தன் பாடங்களை இராக்காலத்தில் படித்து வந்தான். இவ்விதமே சில வருடங்கள் சென்றன. கேசவனின் துரதிருஷ்ட-வசத்தினால் அவனுடைய குரு காலகதி யடைந்துவிட்டார். அவராலேயே நடத்திவந்த அச்சிறு பாடசாலையின் வேலை நிர்வாகத்தைப் பிறகு கைப்பற்றும் கர்த்தாக்கள் இல்லாமையிஞல் பாடசாலையும் எடுபட்டுவிட்டது. புருஷன் இருக்கையிலேயே வயிறெரிந்த உத்தமி பிறகு ஒரு அனாதையை ஆதரிப்பாளா!
வீட்டை விட்டு வெளியேறி விட உத்தரவு பெற்ற கேசவன் -பன்னிரண்டு வயதுடைய பாலகன் - அழுதுகொண்டே வெளியில் வந்தான். தன் தாயாரின் விஷயம் ஒன்றுமே தெரியாமையினாலும் தான் தனித்த பரதேசியானதாலும் அளவற்ற துக்கத்துடன் "இனிமேல் நான் எவ்விதம் பிழைப்பது? யாரிடம் செல்வது? இவ்விதம் அவஸ்தைப் படுவதைவிட உயிரை விட்டுவிடுதல் மேல்" என்று தீர்மானித்தான். சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரிலுள்ள கடற்கரையில் ஒரு நாள் விசனமே வடிவமாக உட்கார்ந்திருந்த கேசவன் தன்னைமீறிப் புலம்பியவாறு "இன்று இருள் சூழும் வரையில் இங்கு இருந்து கடலில் விழுந்து உயிரை விடுவது" என்று தீர்மானித்தான்.
அன்று அந்த கடற்கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நிகழப் போவதால் அதற்காக ஆயிரக்கணக்கான ஜனங்கள், ஆண்களும் பெண்களும் குழுமிவிட்டார்கள். கூட்டத்தின் ஆரம்பத்தில் தேசீய கீதம் பாடப்பட்டது. அந்த கானத்தின் ஒலியைக் கேட்ட கேசவன் சங்கீதத்தினால் கட்டுப்பட்டு அவ்விடம்விட்டு கூட்டத்தினருகில் வந்தான். தேசீய கீதம் வெகு