இனிமையாகப் பாடினவனும் தன்னைப்போன்ற சிறுவனேயாகையினால் "நானும் அவனைப்போல பாடிக்களிக்கும் காலம் வருமா?” என்று ஏங்கினான். அத்தருணம் அங்கு கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஓர் மாது "கேசவா!" என்று அழைத்தாள்.
-------
இக்குரல் கேட்ட கேசவன் திரும்பிப்பார்த்து அங்கு ஓடினான். அந்த அம்மாளைப் பார்த்ததும் "அம்மா! நமஸ்காரம். என்னை தங்களுக்கு நினைவு இருந்ததா!" என்றான். அம்மாது அவனை நோக்கி "கேசவா! நீ அனாதையாக நின்றுவிட்ட செய்தியறிந்தேன். உன்னுடைய கதையைக் கேட்டு மிக்க விசனப்பட்டேன். என்னுடைய பெண்ணுக்கு ஓர் வேலைக்காரன் தேவை; அவ்வீட்டில் நீ வேலை செய்து கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டாள். கடவுளே தனக்குப் பிழைக்கும் வழி காட்டியதைத் தட்டக்கூடாதென்று நினைத்து அவன் அதற்கு ஒப்புக் கொண்டான். பிறகு கூட்டம் நடந்தேறியதும் அம்மாதுடன் அவள் வீட்டிற்குச் சென்று அன்று முதல் அந்த வேலையை வெகு ஒழுங்காகவும், பக்தியோடும் செய்து வந்தான்.
தினந்தோறும் வேலை ஓய்ந்த நேரத்தில் மாலைப்பொழுதில் கடற்கரையில் உட்கார்ந்து வெகு ஆநந்தமாகப் பாடிக்கொண்டிருப்பதும், பிறகு வீடு செல்வதுமாக இருந்தான். இவ்விதமே சில மாதங்களாய் விட்டன. இவன் தினம் பாடிக்கொண்டே வருவதை அங்கு வரும் அனேகர் கேட்டு ஆனந்திப்பது வழக்கம். அவ்விதம் கேட்போரில் பலர் அவனைத் தம்தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாடச்சொல்லிக் கேட்பார்கள்.
கௌரவமான சிலரை ஒன்றுகூட்டி ஒரு சபையை ஏற்படுத்தி அதில் நாடகம் ஆடுவதும், பாட்டுக்கச்சேரி நடத்துவதுமாகச் சில வருஷங்களாக பொன்னுசாமி என்னும் (ஒருவர் நடத்தி வருகிறார். அவர் ஒரு தினம் கடற்கரையில் கேசவன் பாடுவதைக் கேட்டு ஆனந்தித்துக் கேசவனைத் தமது நாடகத்திற்குச் சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு அவனை அழைத்து "எங்கள் சபைக்கு வருகிறாயா! நாங்களே உனக்குச் சாப்பாடு போட்டு வைத்துக்கொள்கிறோம்" என்று கூறினார்.
-----