நாய் போலக் குலைத்துச் சீறி விழுந்து "எ தடிப் பெண்ணே! இதென்ன மூதேவித் தூக்கம். இங்கு தூங்குவதற்காகவா வந்தாய்? தினம் இரண்டு வேளை சோற்றைக் கொட்டிக்கொள்ளவில்லையா? தின்ற மயக்கத்தில் தூக்கம் வந்துவிட்டதோ! மாதம் 5 ரூபாயை வாங்கி முடிந்துகொண்டு மூதேவி போலத் தூங்குகிறாயா?" என்று அதட்டுவார்.
இந்த லோபியின் மிரட்டலுக்குப் பயந்த அந்த சிறுமி தூங்கி வழிந்துகொண்டே உட்கார்ந்திருக்கையிலும் இங்கு நாடகத்தில் பாடும் பாடல்கள் அனேகம் அவளுக்குப் பாடமாக வந்துவிட்டன. சங்கீதத்தில் மிக்க பிரேமையுள்ள அப் பெண் பிறகு நாடக தினத்தில் தூங்காமலேயே விழித்திருந்து நாடகத்தைக் கவனிக்க வாரம் பித்தாள். சங்கீதத்தினிடம் வசியமாகாதவர்கள் உலகிலுண்டா! அந்தப் பெண் வீட்டில் வேலை செய்யும்போதும், இன்னும் மற்ற நேரத்திலும் இந்த நாடகத்தில் கேட்ட பாடல்களைப் பாடிக் கொண்டே இருப்பாள்.
------
நாம் முன்னர் தெரிவித்த சொந்தக்காரர் ஒரு காரியமாக் கடலூருக்கு வந்தார். அவர் எப்போது வந்தாலும் இந்த தனலோபி வீட்டிலேயே இறங்குவது வழக்கம். அப்படி வந்தவர் இவர் வீட்டிலிருக்கையில் அந்தப் பெண் வீடு பெருக்கும்போதும், பாத்திரம் தேய்க்கும்போதும் ஓயாது பாடுவதைக் கண்டும் அந்தப் பெண்ணின் இனிமையான சாரீரத்தைக் கேட்டும் ஆச்சரியமடைந்து அந்தப் பெண்ணை அருகிலழைத்து "அம்மா! நீ யார்? எங்கிருப்பது? உனக்கு வயதென்ன ஆகிறது? உன் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? எத்தனை நாளாக இங்கு வேலை செய்கிறாய்?” என்ற கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டார்.
அதுகேட்ட அந்தப் பெண்மணி வெகு மரியாதையுடன் "ஐயா! நான் இந்த வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன்; நாங்கள் தற்போது இந்த கடலூரில் தான் இருக்கிறோம். இதற்கு முன்னர் பெரியவர்கள் வேறு ஊரில் இருந்தார்களாம். என் தாயாரும், எனக்கொரு தங்கையும் தானிருக்கிறார்கள். என் தங்கை கேவலம் சிறியவள். என் தாயார் காச நோயினால் மிக்க பலஹீன மடைந்துவிட்டார்கள். என் தந்தையின் விஷயமே தெரியாது. என் தாயும் அது பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை. என்னுடைய இந்த சம்பளத்தினால் எங்கள் தாயாரும் தங்கையும் ஏதோ கஞ்சி குடித்துக்கொண்டும் பட்டினி கிடந்தும் ஜீவிக்கின்றார்கள்" என்று தன் முழு விருத்தாந்தத்தையும் மிக்க வருத்தத்தோடு கூறினாள்.