யாகையினால் அவள் வாக்கு பலித்துவிட்டதே! என்ன செய்வேன்?” என்று கதறினான்; முட்டிக் கொண்டான்.
இவனுடைய மாறுதலைக் கண்டு சகலமானவர்களும் பிரமித்து விட்டார்கள். அவர்களுடைய வெறுத்த மனமும் உருகும்படியான நிலைமையில் பொன்னுசாமி மாறிவிட்டான். பிறகு எத்தனையழுது என்ன உபயோகம் ? தான் செய்த அக்கிரமத்தை எல்லாம் தானே கூறிக் கதறினான். குணவதியின் சவத்தை தகனத்திற்கும் கொடாது கட்டிப் புலம்பினான். பிறகு சவச் சடங்குகள் முடிந்தன.
அந்த நிமிடத்தில் மாறுதலடைந்த பொன்னுசாமியின் மனம் பரிபூர்ணமான வைராக்கியத்தில் திரும்பிவிட்டது. தாசியை அடியோடு வெறுத்தான். "ஹா! ஏ சிற்றின்பப் பேயே!....மோகனாஸ்திரப்பிரம்ம ராக்ஷஸே! உன்னாலன்றோ, நான் சகல விதத்திலும் கழி பட்டேன். கண்ணான பெற்றோரையும், குணக் குன்றாகிய மனைவியையும் உயிருடனிருக்கையிலேயே இழந்திருந்தேன்; இப்போது அடியோடு இழந்து விட்டேன். ஹா! குணவதி! உன்னை சகல உரிமையுடன் நான் அடைந்தும், உன் குணத்தின் மணமறியாப் பாதகனானேன்." என்று பலவாறு வருந்தினான்.
இந்த விசனத்தைத் தாங்காது அவன் பெற்றோர்கள் அப்போதும் பொன்னுசாமியை முற்றும் நம்பாது வெறுத்தார்கள். இவ் விடத்திலிருக்க மனம் சகியாது மீண்டும் யாத்திரை கிளம்பி விட்டார்கள். அவர்களோடு பொன்னுசாமியும் உலகையே வெறுத்து யாத்திரை கிளம்பினான்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...