அப்போது இராக் காலமாகையினால் குளிர்ச்சியான காற்று வீசுகின்றது. அன்று பூர்ணமான சந்திரன் பிரகாசிக்கக் கூடிய பௌர்ணமியாக விருந்தும் குணவதியின் மரணத்திற்கு வருந்தி துக்கங் கார்ப்பவன் போலவும், அவளுடைய சவக் கோலத்தைக் கண்டு சகிக்க மாட்டாதவன் போலவும் மேகத்திடை மறைந்து விட்டான். மேகங்களோ இந்த அபாரமான துக்கத்தை—கணவனால் மனம் நொந்து உயிர் விட்ட உத்தமியின் சரிதையை - உலகினருக்கு எடுத்துக் கூறுவது போல வெகு வேகமாய் இங்குமங்கும் ஓடியாடி விசனிக்கின்றன.
அந்த நிலைமையில் சவம் ஒரு வீதியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெரிய மாடி வீட்டின் மாடியில் உல்லாசமாய்க் காற்று வாங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமி அங்கு ஏதோ ஊர்வலம் வருகிறதென்று கொட்டு முழக்கினாலும், விளக்கின் ஒளியினாலும் எண்ணி அதைப் பார்க்கலானான். வெளியூருக்குச் சென்றிருந்த அவனும் மோகனாவும் அன்று நேராக அந்த வீட்டில் நடக்கும் தேக் கச்சேரியில் சங்கீதக் கச்சேரி செய்வதற்காக வந்து விட்டார்கள்.
மோகனா உள்ளே ஆநந்தமாகப் பாடிக் கொண்டிருக்கையில் பொன்னுசாமி மாடியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தான். அச் சமயத்தில் குணவதியின் சவம் அவ்வீட்டின் சமீபத்தில் வரவே அதை அப்போதே சவமென்று அறிந்து உற்றுப் பார்த்தான். அந்தச் சவம் குணவதியினுடையது என்பதை யறிந்ததும் உண்மை யிலேயே அவனால் தாங்க முடியாமலும் தடுக்க முடியாமலும் திடீ ரென்று ஒருவித (Shock)மன அதிர்ச்சி உண்டாகி விட்டது. அவ்வளவுதான் அவன் தன்னை மீறி, "ஆ! இந்தச் சவம் என் மனைவியான குணவதியல்லவா! ஐயோ! குணவதி இறந்து விட்டாளா! குணவதியின் சவம்தானா இது!...ஆ! அதோ! என் பெற்றோர்........ ஐயோ!.... மோசம் போய் விட்டோமே!...." என்று கதறிக்கொண்டே ஒட்டமாகக் கீழே இறங்கி வீதியில் வந்து நடு ரோட்டில் தடா ரென்று விழுந்தான்.
-----
பெற்றோரை நோக்கி, "என்னரிய குணவதியைச் சண்டாளன் நேற்று முன் தினமே காலால் உதைத்துத் தள்ளி வந்தேனே! என் பெற்றோர்களே! மகா கொடிய பாதகனாகிய நான் இனி என் குற்றத்தை யுணர்ந்து யாது பயன்.? ஐயோ! என் மதியில் சிற்றின்ப மென்கிற இருள் சூழ்ந்து என்னைக் கேவலம் படுகுழியில்-அன்பற்ற நரகத்தில்-தள்ளி விட்டதே! ஐயோ! குணவதியின் வார்த்தைகளை அலக்ஷியம் செய்தேனே! பெற்றோரைப் புறக்கணித்தேனே! அவள் உத்தமி-