மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு வாடுவதற்கு மாட்டாது தன் மாமியை நோக்கி "மாமி! மகா கொடிய பாவி ஒருத்தி உலகிலிருந்து சில தினத்தில் மறைந்துவிடப் போகிறாள். அவளுக்காக விசனப்படுபவர்களை கேவலம் மூடர்களேன்றே கடவுள் மதிப்பார். அவளுடைய ஆன்மா நீங்கிய அன்னாளை நன்னாளாகக் கொண்டாட வேண்டுவதே கடவுளின் மனோல்லாசமான காரியமாகும். கேவலம் ஓர் பேதையாகிய என்மீது நீங்கள் உயிரையே வைத்திருப்பது மிக்க மதியீனமாகும். உலகில் ஒருவருக்கொருவர் சத மன்று; அநித்தியம். என்பதை எத்தனையோ உதாரணங்களோடு பெரியார் வெளியிட்டுள்ளார்கள். ஆகையினால் என்றைக்கிருப்பினும் அழிந்து போகக்கூடிய இவ் வுயிரை நீங்கள் இனி விரும்ப வேண்டாம்.
என் தாயே! என்னுயிர் நீங்கிவிடும் என்று என் மனச் சாக்ஷி சொல்லுகின்றது; ஆதலால் நீங்கள் கவலையை இப்பொழுதே ஒழித்து என் முடிவைத் தைரியமாயும், சந்தோஷமாயும் எதிர் பாருங்கள். கவலை வேண்டாம். இந்த பிரியத்தை எம்பெருமான் மீது செலுத்துங்கள். பரமபதவி கிடைக்கும். மறுமைக்கு எல்லை யில்லா பாக்கியம் கிட்டும். என்னுடைய கர்மா என்னோடு தொலைந்து போகட்டும். என்னுயிர் நீங்குவதற்குள் நான் உங்கள் மகனைப் பார்க்க விரும்புகிறேன். என் கடைசி விருப்பம் இதுதான். அவர் முகத்தைப் பார்த்த உடன் நான் நிம்மதியாகி விடுவேன்" என்றாள்.
இந்த துக்ககரமான வார்த்தைகளைக் கேட்ட அந்த அம்மாள் மிக்க இடிந்துபோய் "ஆ! என்ன இது குணவதி! உன் வாயிலிருந்து இத்தகைய மொழிகளையா வெளியிட்டாய்! ஐயோ! உன்னை இழப்பதையா நன்னாளாகக் கருதுவது ........... அதைவிட எங்களை இழப்பதைக் கூறினும் ஒப்புமே! என் செல்வமே! உன்னை வேண்டி நாங்கள் உயிர் வாழ்ந்தோமே! எங்களைக் கைவிட்டு விடுவதையா நீ விரும்புகின்றாய்....அந்தச் சண்டாளப் பாவி ஊரிலேயே இல்லை யாமே! ஐயோ என்ன செய்வேன்?"....என்று வருந்தினார்கள்.
பொன்னுசாமியை அழைத்துவரும்படியாக வேலைக்காரனை அனுப்பினார்கள். அன்றே பொன்னுசாமி ஊரிலிருந்து வந்தான். வேலைக்காரனைக் கண்டதும் சீறி விழுந்து "வெளியே போ; வருகிறேன்" என்று கூறியனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டிற்கு அன்று பூராவும் வராது மறுநாள் வந்தான்; குணவதி படுக்கை-யிலிருப்பதைக் கண்டான்.
----