--------
இத்தகைய உதிரத்தில் என்னை என் ஜெனிக்கச் செய்தாய் கடவுளே என்று நான் வருந்துகிறேன். எனினும் பூத உடல் படைத்த தந்தையாகக் கடவுள் உம்மை நியமித்திருப்பதால் நீர் என் தந்தை என்று நம்புகிறேன். உம்மையும் உமது செய்கையையும் கண்டவர்கள் என்னைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்.......... இத்தகைய மனிதனின் - கொலைகாரனின்-பெண்ணாம் என்ற பட்டமல்லவோ எனக்கு வரும்!.... நான் ஏதோ செய்த தீரச் செய்கைக்கு ஏற்ற தந்தையாக எனக்கில்லையே என்ற வருத்தம் உண்மையில் என் மனத்தைப் பிளக்கின்றது. என்ன செய்வது? பூர்வ ஜென்ம சுகிர்தம்." என்றாள்.
கோமதி:- பாலாம்பாள்! நீ சின்னத்தனமாகப் பேசுகின்றாய்! உன்னுடைய மனத்தில் ஆயிரம் எண்ணங்கள் உதிப்பினும் உன்னுடைய பிதா அவர் என்பதை மறக்க முடியாது. அவர் மனம் ஏற்கெனவே புண்பட்டுத் தவிக்கும் சமயம் நீயும் இவ்விதமான சுடு சரத்தை விடாதே! அது தருமமன்று. அவ்வெண்ணத்தை மாற்றிக் கொள். உன்னுடைய தூய எண்ணத்தினாலும் செய்கையினாலும் அவருடைய மாசை ஒழித்து விடக் கூடும். அவ்வழியில் உன் எண்ணத்தைச் செலுத்து. இதுகாறும் அவர் எவ்விதம் இருந்த போதிலும் இப்போது அவர் நல்லறிவு பெற்று தன்னையே தான் நொந்து கொள்ளும் நிலைமைக்கு வந்து விட்டார். ஆதலால் இனி நாம் நமது கடமையில் தவறாது நடக்க வேண்டும். அவருடைய குற்றத்திலிருந்து மீட்கும் வழியை நாம் கட்டாயம் செய்து அவரைக் காக்க வேண்டும். அதற்கான வழியில் நாம் உழைப்பதே கடவுளின் முக உல்லாசமாகும். இனி துடுக்காகப் பேசாதே!
---------
கங்காதரன்:- கோமதி! குழந்தையைக் கடிந்து கொள்ளாதே. மகா கொடிய பாதகன் நான் காமுகனாய் என் செல்வியையே என் வாயினால் கண்டபடி உளறிய நாவைத் துண்டிக்கவும் அவள் மனம் விரும்பலாம். அதற்காக நான் கோபிக்கவில்லை. கோபிக்கவும் எனக்கு முகமிருக்கின்றதா ! இல்லை; இல்லை. பாலா! உனக்குத் தந்தை என்று கூறிக்கொள்ள எவ்விதமும் நான் அருகதையல்லன் என்பதை என்னுள்ளம் அறிகின்றது. கண்ணே! நீ