இப்போது ஒன்றுமில்லையா! சரியாகி விட்டதா! வலி எப்படி இருக்கின்றது?" என்று கேட்கிறார்கள்.
அதைக் கேட்டதும் அவன் ஆச்சரியமுற்று "என்ன! எனக்கு உடம்பா! என்ன உடம்பு! என்ன வலி! ஐயா! எனக்கு ஒன்றும் விளங்க வில்லையே! நான் விடிவதற்கு முன்னமேயே நன்றாகப் படுத்து நித்திரை போய் விட்டதுதான் எனக்கு நினைவிருக்கின்றது. வேறு ஒன்றும் நினைவில்லை. இப்போது முற்பகலா, பிற்பகலா!" என்று தன் தேகத்தை முற்றும் பார்க்கிறான். காலில் ஒரு கட்டு இருப்பதை அப்போதுதான் காண்கிறான். உடனே "இதென்ன கட்டு?” என்று கேட்கிறான்.
அதற்கு அவர்கள் "அப்பா! நீயோ வயதில் சிறியவனாகவே காணப்படுகின்றாய்! நீ நேற்று மலை ஏறும்போது நாங்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தது உனக்கு நினைவிருக்கலாம். எங்களில் சிலர் உன்னை ஏறவேண்டாம் என்றதற்கு நீ மறுத்து எங்களை லக்ஷயம் செய்யாமல் போய் விட்டாய்! நாங்கள் இந்த மலையிலும் மலை அடிவாரத்திலும் முக்கியமான சில சீன்களை சப்தத்தோடு கூடிய படம் பிடிக்க வந்திருக்கிறோம். ஆறுமாத காலமாக நாங்கள் சுற்று கிறோம். இன்று காலையில் மலையின் மேல் பாகத்தில் ஒரு சுனை இருக்கின்றது; அதைப் படம் பிடிக்கச் செல்கையில் நீ மரத்தடியில் படுத்திருந்தாய்! ஒரு பாம்பு உன் காலில் கடித்து விட்டுப் போவதைக் கண்டு, உடனே உன்னை எழுப்பாமல் இருக்க ஒரு பச்சிலையை உன் மூக்கில் முகரச் செய்தோம். அப்படியே மற்றொரு பச்சிலையின் காற்றை உனக்குள் செலுத்தினோம். வேறொரு பச்சிலையைக் கடித்த விடத்தில் கட்டினோம். இம் முறைகள் ஓர் பெரிய மகானின் மூலம் நாங்கள் பெற்றுக் கொண்டுதான் இந்த மலை வாசத்திற்குப் பயமின்றி வந்தோம்.
பிறகு உன்னை இங்கு கொண்டு வந்து விட்டோம். உன்னை யறியாமலேயே இரு முறை வாந்தி எடுத்தாய் ; அதில் நீல மாக விஷம் வெளியே வந்தது. பிறகு ஒரு பச்சிலையைக் கொடுத்தோம். இப்போது நீ தெளிந்து எழுந்தாய். விஷம் இல்லை; இறங்கி விட்டது என்று அர்த்தம், இனிப் பயமில்லை, பிழைத்துக் கொண்டாய் ! நீ இனிமேல் இவ்விதம் தனிமையில் செல்லவேண்டாம். அந்த குகையில் செல்வது சாமானியமன்று. நாங்கள் ஆயிரமாயிரமாய்ச் செலவு செய்து ஏரோப்ளேனில் பறந்து சென்று பார்த்தும் பயனில்லாது போய் விட்டது. ஆகையினால் நீ இந்த பெரிய காரியத்தில் இனி பிரவேசிக்காதே உன்னுடைய வரலாறு என்ன! நீ ஏன் இவ்விதம் கிளம்பினாய்?" என்று கேட்கிறார்கன்.