---------
இதுகேட்ட அந்தப் பையன் மிக்க ஆச்சரியமும் திகைப்பும் அடைந்து "ஆ! என்னையா பாம்பு கடித்தது!.. நீங்கள் இந்த ஏழைப் பரதேசியின் மீது அன்பு வைத்து இத்தகைய உதவி செய்ததற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ?" என்று கூறித் தனது கதை முழுதும் கூறுகிறான்; இது கேட்ட அவர்கள் இவன் மீது. அனுதாபங் கொண்டு "அப்பா! நீ எங்கள் கம்பெனியிலேயே ஒரு நடிகனாகச் சேர்ந்துவிடு. நாங்கள் ஊரு ஊராக சுற்றக்கூடியவர்கள். அங்கெல்லாம் நீயும் வரலாம். அங்கு உன் தாயாரையும் தேடலாம். ஆகையினால் வருகிறாயா! எங்களாலாகிய உதவியைச் செய்கிறோம்." என்கிறார்கள். அதற்குப் பையன் சம்மதப்பட்டு "ஐயா! நான் உங்களிஷ்டப்படியே நடக்கின்றேன்" என்று உறுதியாய்க் கூறிவிடுகின் றான். பிறகு பையனை அவர்கள் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவர்களோடு சென்று அவன் நடிக்கக் கற்றுக் கொள்கிறான்...
என்றது வரையில் அன்றைய நடிப்பில் முடிந்தது. இந்தக் கதை மலைப் பிரதேசத்தில் நடப்பதற்காகவே அதற்குத் தகுந்த இடமாக அமர்த்திக் கொண்டார்கள். "இம்மட்டுடன் இன்று நின்று விட்டது. இனிமேல் வெளிச்சம் குறைந்து விட்டது. நாளைய தினம் தான் நடிக்கப்படும். இது பேசும் படமாகத் தயாரிக்கின்றோம்" என்று முதலாளி பாலாவினிடத்தில் வந்து தெரிவித்தான்.
இதுகேட்ட பாலா, "ஐயா! உங்களிடம் நான் ஒரு விஷயம் தனிமையில் பேசவேண்டும். அதற்கு அனுமதிக்கப்படுமா?” என்று வெகு நயமாகக் கேட்டாள். அதற்கு இசைந்த எஜமானனிடம் பாலாவும் கோமதியும் சென்று "ஐயா! இந்த, கதையை இப்போது நடித்தவரே கற்பனையாக எழுதினாறா? அன்றி வேறு யாரேனும் எழுதியதை இவர் நடிக்கின்றாரா! அது உண்மையில் நடந்ததா" என்று கேட்டாள்.
எஜமா:- அம்மா! எனக்குத் தெரிந்த மட்டில் அவரே கற்பனையாக எழுதியதாகத் தெரிகின்றது. அவர் முன்பு வேறு ஒரு படக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தார். அக் கம்பெனி இருவரால் சேர்ந்து நடத்தப்பட்டதால் சண்டை வந்து விட்டதாம். அதனால் கம்பெனி கலைந்து விட்டது. அதன் மானேஜர் எனக்குத் தெரிந்தவராதலால் நான் ஒரு கம்பெனி வைக்க ஆசையுற்று, இந்த தீவிலேயே நடத்த உத்தேசித்து நல்ல நடிகர்களை அனுப்ப வேண்டுமென்று