எத்தகைய பாவ மொழிகளைச் சொல்லுகிறாய்! இவ்விதம் பொய் சொல்ல நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். இதனால் என் உயிர் போனாலும் கவலையில்லை. வீடு வீடாய்ப் பிச்சை எடுத்தாயினும் இந்தக் கடனைத் தீர்ப்பேனே யொழியப் பிறரை நான் இவ்விதம் ஒரு நாளும் வஞ்சிக்க மாட்டேன்.
(பெருத்த விசனத்துடன் ஒரு புறமாகப் போய் விடுகிறார்)
ஸோமே : (ஒரு புறமாக) ஐயோ! என்ன ஆபத்து வந்து விட்டது! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது சரியாய்ப் போய் விட்டதே! அதோ யார் வருகிறார்கள்? ஓகோ! எஜமானி அம்மாள் வருகிறார்கள் (கோகிலமும் கோமளாவும் வருகிறார்கள்)
கோகி : அடி கோமளா! என் பிராணபதி எங்கிருக்கிறார்? அவருடைய திருமேனிக்கு யாதொரு துன்பமும் சம்பவிக்கவில்லையே! அவர் செளக்கியந்தானே? அவருடைய நண்பர் ஸோமேசருக்கு யாதொரு கெடுதலுமில்லையே?
கோமளா : தாயே! இருவரும் க்ஷேமமே! ஆனால் தாசியினால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகை மூட்டை மாத்திரம் திருட்டுப் போய்விட்டது.
கோகி : ஆகா! என்ன ஆச்சரியம்! நகை மூட்டை போய் விட்டதா அவர் தேகத்திற்கு யாதொரு விபத்துமில்லாமல், தப்பித்ததுகூட எனக்கு சந்தோஷமாகத் தோன்றவில்லையே. பிராணனிலும் மானம் அல்லவோ பெரிது! அவருக்கு இதனால் பெருத்த அபவாதம் வந்து விடுமே தன் ஏழ்மைத் தனத்தினால், நகைகளை அவரே எடுத்துக் கொண்டதாய் அல்லவா ஜனங்கள் நினைப்பார்கள். பொழுது விடிந்ததும் இந்த அபவாத மொழியைக் கேட்பதைவிட இப்பொழுதே நாங்கள் இருவரும் நாவைப் பிடுங்கிக் கொண்டு உயிரை விடுவதே நல்லது (சிறிது யோசனை செய்கிறாள்) ஓகோ! இதோ என் கழுத்தில் ஒரு வைர ஸரம் மிகுதியாய் இருக்கிறது. என்னுடைய ஆபரணங்கள் எல்லாம் போயும், இது விலை மதிப்பற்றது என்று இதை மாத்திரம் விலக்காமல் வைத்திருக்கிறேன். திருட்டுப் போன நகைகளுக்குப் பதிலாக இதைக் கொடுத்து விடுகிறேன். அதோ ஸோமேசர் நிற்கிறார்! அவர் மூலமாக இதை அனுப்புகிறேன்! ஓய்! ஸோமேசரே! நம்முடைய எஜமானர் எங்கிருக்கிறார்?