உறுகணி லுதவுநேயர் உயரற நெறியிற் சேறல்
பெறுபவ ரெனைய பொல்லாங் கெய்தினும் வறியராகார்
சிறுமையு மலக்கண்யாவு மென்செயு மகன்று போமால்.
நான் ஒரு ஏழையென்றல்லவோ என்னை மதித்து வருந்தினேன். நான் ஒரு நாளும் ஏழையாக மாட்டேன். புருஷனுடைய செல்வம் எல்லாம் அழிந்தும், தன் அன்பைத் துறக்காத மனைவியும், நம் சுகதுக்கங்களைத் தன்னுடையவையாகப் பாவிக்கும் உண்மை நண்பனும், ஏழ்மைத் தனத்தினால் மழுங்காத நீதி நெறியும் ஆகிய மூன்றும் எனக்கிருக்க, நான் எப்படி ஏழையாவேன்? என்றாலும் நான் இந்த வைர ஸரத்தை வாங்கிக் கொள்ள மாட்டேன். ஆகா ஒரு ஸ்திரீயினிடத்தில் பொருள் உதவி பெறும் படியாக வந்து விட்டதா என் கதி? அவளுடைய பொருள் எனக்கு வேண்டாம்.
ஸோமே : ஸ்வாமி! இந்த சமயத்தில் தாங்கள் இப்படிச் சொல்லக் கூடாது. எஜமானி அம்மாளே தங்களுடைய பொருள் ஆயிற்றே. அப்படியிருக்க, அவர்களுடைய பொருளெல்லாம் உங்களுடையவை தாமே. தவிர எவ்வளவோ விலை உயர்ந்த காணாமற் போன நகைகளின் பெறுமானத்தை நாம் இந்தக் கேவல நிலைமையில் எப்படிச் சம்பாதிக்க முடியும்? ஆகையால் இதை வாங்கிக் கொள்ளுங்கள்.
மாத : (சிறிது யோசனை செய்து) சரி! நீ சொல்வதும் நியாயந்தான்! சீக்கிரம் நீரே வஸந்தஸேனையிடம் போய், நான் அவளுடைய நகைகளைச் சூதாடித் தோற்று விட்டதாகவும், அதற்குப் பதிலாக இந்த ஸரத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும் தெரிவித்துக் கொடுத்துவிட்டு வாரும்!
ஸோமே : முழு ஸரத்தையுமா கொடுக்கச் சொல்லுகிறீர்கள்? நன்றாய் இருக்கிறதே! அவளுடைய நகைகளை நாம் தின்று விட்டோமா? அல்லது நாமே அபகரித்துக் கொண்டோமா? திருடன் கொண்டு போய்விட்டால் அதற்கு நாம் என்ன செய்கிறது? சூதாடி இழந்து விட்டதாகச் சொல்லுவானேன்? திருட்டுப் போய் விட்டதென்று சொல்லி அதற்குப் பதில் நாலைந்து வைரங்களை அனுப்பினால் போதுமே ஏழு சமுத்திரங்களையும் கடைந்தெடுத்த சாரத்தை