ஸோமே : இதோ பாருங்கள் துவாரத்தை!
மாத : ஆகா! இந்தத் துளை எவ்வளவு அழகாய் இருக்கிறது! திருடன் மிகவும் சாமர்த்தியசாலியாய் இருக்கிறானே!
ஸோமே : நல்ல இடம் பார்த்துத் திருட வந்தான் முட்டாள்!
மாத : இவன் இந்த ஊர்த் திருடனாய் இருக்க மாட்டான். இவன் அந்நிய தேசத்தான். இந்த வீட்டின் வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து நுழைந்திருக்கிறான். நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன் என்பது இந்த ஊரில் யாருக்குத்தான் தெரியாது! திருட்டிலும் அதிர்ஷ்டம் வேண்டும். நான் நல்ல ஸ்திதியில் இருந்த பொழுது இவன் திருட வந்திருக்கக் கூடாதா! இவன் சிரமத்திற்கு ஏதாவது பொருள் கிடைத்திருக்குமே! இவன் தன்னுடைய நண்பரிடத்தில் என்னை இகழ்ந்தல்லவோ பேசுவான். ”இவ்வளவு இடம்பமாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறான். உள்ளே ஓட்டைச் சட்டிக்கும் வழி இல்லை” என்று சொல்லுவானே!
ஸோமே : ஐயோ பாவம்! அவன் இவ்வளவு பாடுபட்ட தும் வீணாய்ப் போயிற்றே என்று விசனப்படுகிறீர்களே! நான் உங்களிடம் கொடுத்த வஸந்தஸேனையின் நகை மூட்டையில் தாம்பூலம் வைத்து அவனுக்குத் தத்தங் செய்து விடுகிறது தானே!
மாத : நகை மூட்டையை என்னிடத்தில் கொடுத்தாயா? என்ன விளையாடுகிறாய்?
ஸோமே : (சந்தோஷமாக) நல்ல வேளை! நான் அதை உங்களிடம் கொடுக்காமல் இருந்தால், அதை அடித்துக் கொண்டு போயிருப்பான். எருமைக் கடாவைப் போல நான் தூங்கி விட்டேன் என்று சொல்லுவீர்கள்; தப்பினேன்.
மாத : என்ன ஸோமேசா? இன்னமும் தூக்கக் கலக்கமா? இதுதானா பரிஹாஸம் பண்ணும் சமயம்? நகை மூட்டை ஜாக்கிரதையாய் இருக்கிறது அல்லவா? என் மனதிற் கவலை உண்டாய் விட்டது. ஹாஸ்யம் செய்யாமல் உண்மையாய்ப் பேசு.