சரி! சந்திரன் அஸ்தமனமாகும் சமயத்தில் இருக்கிறது; இதுவும் அதிர்ஷ்டந்தான்! சந்திரனும் திருடருக்கு அனுகூலமானவன்தான்! என்னைப் போன்ற புண்ணியவான்களுக்கு இரவானது இருளைக் கொடுத்து உதவுவதைப் போல, ஒரு தாய் கூடத் தன் குழந்தைக்கு உதவி செய்ய மாட்டாள். தோட்டத்திற்குள் வந்தது ஒரு பெரிய காரியம் அல்ல. இனி இந்த மாளிகைக்குள் நுழைவதே அருமையான விஷயம். பிறர் தூங்கும் பொழுது ஜெயம் பெறுவதும், தந்திரத்தினால் பொருளை அபகரிப்பதுமான இந்த உத்தியோகத்தைக் கெட்ட தொழில் என்று ஜனங்கள் சொல்லுகிறார்களே! முட்டாள் ஜனங்கள்! இது அவ்வளவு வீரத் தனமல்ல என்றாலும் பிறருக்கு அடிமைத் தொழில் செய்யாமல் சுவதந்திரத்தோடு இருக்கக் கூடிய அலுவல் என்பதைப் பற்றி சந்தேகமில்லை. பாரத யுத்தத்தில் இரவில் தூங்கிக் கொண்டிருந்த பகைவரை அசுவத்தாமன் இரகசியமாகப் போய்க் கொன்று வெற்றி அடையவில்லையோ! ஆகையால் இது குற்றமாகாது. (நாற்புறங்களையும் உற்று நோக்கி) எங்கே கன்னம் வைக்கலாம்! எங்கே துளை போட லாம்! ஈரத்தினால் எந்த இடம் தளர்ந்து உப்புப் பூத்திருக்கிறதோ பார்க்கலாம். மனிதர் சமீபத்தில் இல்லாத இடமாக இருக்க வேண்டும். கல், மண் முதலியவை விழுவதின் ஒசை ஒருவருக்கும் காதிற்படக் கூடாது. (சுவற்றைத் தடவிப் பார்க்கிறான்.)
பேஷ் இதுதான் சரியான இடம்! இங்கு உப்பறித்திருக்கிறது! அதோடு ஒரு எலி வளையும் இருக்கிறது! இது நல்ல சகுனந்தான். சொத்து நிச்சயமாய் அகப்படும்; தடையில்லை. கன்னம் வைப்பதில் நான்கு வகைகளுண்டு. சுட்ட செங்கல்லைப் பெயர்த் தெடுப்பது, சுடாத கற்சுவரைக் கடற்பாறையால் தோண்டுவது, மண் சுவராய் இருந்தால் தண்ணிர் விட்டுத் தோண்டுவது, மரப் பலகை உட்புறத்தில் வைக்கப்பட்ட சுவராய் இருந்தால், அதை வாளினால் அறுப்பது, இது சுட்ட செங்கற் சுவர். கற்களை ஒவ்வொன்றாய் பெயர்த்து எடுத்து விடுகிறேன். இதில் என்னுடைய சாமர்த்தியத்தைக் காட்டுகிறேன். துளையைத் தாமரைப் புஷ்பத்தைப் போலச் செய்யலாமா? அல்லது பூரண சந்திரனைப் போலச் செய்யலாமா? இல்லாவிட்டால் தண்ணீர்ப் பானையைப் போலச் செய்யலாமா? இதைப் பார்த்து விட்டு வீட்டுக்காரர்கள் மூக்கில் கையை வைத்து ஆச்சரியப்பட வேண்டும். திருடப் போனாலும் பிராம்மணன் சாஸ்திரப்படியும் புத்திசாலித்தனமாயும் தன் வேலையைச் செய்வான் என்று இதைக் காண்போர் சொல்ல வேண்டும் நான் உள்ளே போய்த் திருடிக் கொண்டு வெளியில் வருகிற வரையில் அந்தக் கந்தனே என்னைக் காப்பாற்ற வேண்டும்! (கை குவித்து) ஊர்த் தெய்வங்களை எல்லாம் வணங்குகிறேன். எனக்கு இந்த அருமையான வித்தையைக் கற்றுக் கொடுத்தவரான குருவின் பாதமே துணை! அவர்தாம் எனக்கு இந்த மாத்திரைக் கோலை கொடுத்தவர். இதை வைத்துக்