கொண்டு போனால் என்னை எவரும் பிடிக்க முடியாதாம். சே! என்ன வெட்கக்கேடு? அளப்பதற்குத் தேவையான நூலை எடுத்துக் கொண்டுவர மறந்து விட்டேனே! (யோசித்து நல்ல வேளையாய்ப் பிராம்மணன் ஜாதியிற் பிறந்தேன். என்னுடைய பூணுலை நான் இத்தனை வருஷமாய்த் தூக்கிச் சுமந்ததற்கு இந்தச் சமயத்திற்குத்தான் அது உபயோகப்படப் போகிறது. என்னைப் போன்ற உத்தமப் பிராம்மணருக்குப் பூணூல் இல்லாவிட்டால் என்ன யோக்கியதை இருக்கிறது. சுவற்றின் உயரம், கனம் முதலியவை எவ்வளவு இருக்கின்றன என்பதை சுலபத்தில் இதனால் அறிந்து கொள்ளலாம். காப்பு முதலிய கெட்டியான நகைகளை இழுத்து விலக்குவதற்கும், துளைக்குள் விட்டுத் தாழ்ப்பாளைத் திறப்பதற்கும், பாம்பு கடித்து விட் டால் விஷம் ஏறாமல் உடனே இறுகக் கட்டுவதற்கும் இதைப் போல உதவி செய்யக் கூடிய சமய சஞ்சீவி வேறு என்ன இருக்கிறது?
(பூணூலால் சுவரை அளக்கிறான்)
சரி இன்னும் ஒரே செங்கல் மிகுதி இருக்கிறது! இதோ எடுத்து விட்டேன். (உள்ளே பார்க்கிறான்) ஒரே விளக்கு மங்கலாய் எரிகிறது. அதைப் பற்றிக் கவலையில்லை. உள்ளே போகிறேன். என்னைப் பாதுகாக்க அந்தக் கார்த்திகேயன் இருக்க எனக்கு என்ன கவலை?
(உள்ளே நுழைகிறான்)
யாரோ இரண்டு மனிதர் தூங்குகிறார்கள். நானோ ஒருவன். தப்பித்துக் கொண்டு வெளியில் ஓடுவதற்கு அநுகூலமாக முதலில் வெளிக் கதவைத் திறந்து வைக்கிறேன். (கதவைத் திறக்கிறான்) அடாடா! கோமுட்டி வீட்டுக் கதவைப் போல் கிரீச் என்று ஓசை செய்கிறதே! இதற்கு என்னிடத்திலா மருந்தில்லை! இரும்பு துருப்பிடித்திருக்கும் இடத்தில் கொஞ்சம் தண்ணிரை விட்டால் சப்தம் இல்லாமல் போகிறது. (எதிரில் இருந்த தண்ணீரில் கொஞ்சம் எடுத்து விடுகிறான்) சரி இப்பொழுது சரியாய்ப் போய்விட்டது இவர்கள் உண்மையில் நித்திரை செய்கிறார்களா அல்லது பாசாங்கு செய்கிறார்களா என்று பரீட்சை செய்து பார்க்கிறேன். இவர்கள் குறட்டை விட்டு தூங்குகிறார்கள். மூச்சை அவசரம் இல்லாமல் ஒழுங்காய் விடுகிறார்கள். கண்களை இறுக மூடிக் கொள்கிறார்கள். உடம்பு சோர்ந்து கிடக்கிறது, கணுக்கள் எல்லாம் தளர்ந்திருக்கின்றன. (நெருப்புக் குச்சியைக் கிழித்து அவர்களின் முகத்திற்கு நேரில் பிடிக்கிறான்) பொய்த் தூக்கமாய் இருந்தால் வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் அதைப் பொறுக்கக் கூடாமையால், முகத்தில் சலனம் உண்டாகும். கண்களிலும் அசைவுண்டாகும். சரி.