காணிக்கையை அவசியம் பெற்றுக் கொண்டு இந்தப் பரம பக்தனை இரட்சிக்க வேண்டும். இந்த விளக்கின் வெளிச்சம் நம்மை ஒருவேளை காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் விளக்கு இவர்களுக்கு அருகில் இருக்கிறது. இந்தச் சிமிழில் அடைத்துக் கொணர்ந்திருக்கும் விட்டிற் பூச்சிகளை இதோ பறக்க விடுகிறேன். (பூச்சிகளைப் பறக்க விடுகிறான்) பலே! அதோ விளக்கின் அருகில் போய்விட்டன! உம் ஆகட்டும் சீக்கிரம், பலே! அதோ அணைத்து விட்டன! என்ன இருள்! என்னுடைய உயர் குலத்தின் பிரகாசம் இந்தக் கேவலத் தொழிலினால் எப்படி மழுங்கிற்றோ அப்படி அல்லவோ இருள் மூடிக் கொண்டது. நான் பிராம்மணனுடைய புத்திரன். நான்கு வேதங்களையும் படித்தவன். பிறரிடத்தில் நான் என்ன நிலைமைக்கு வந்து சேர்ந்தேன்! என்ன தொழிலில் அமர்ந்தேன்! மல்லிகாவை எப்படியாவது நான் அடைய வேண்டும் என்னும் ஆசை அல்லவோ என்னை இப்படித் தூண்டுகிறது. என்ன செய்கிறது! இதெல்லாம் பூர்வஜென்ம வாசனை! இது தவறென்று தெரிகிறது. என் மனது இதைச் செய்யக் கூடாது என்று தடுத்த வண்ணமிருக்கிறது. தேகம் மாத்திரம் தானாக இவைகளைச் செய்து கொண்டே போகிறது! அதைத் தடுக்க என்னால் முடியவில்லையே. ஆகா! இந்த பிராம்மணன் நமக்கு எவ்வளவு மரியாதை செய்து நம்மை உபசரிக்கிறான்! வேதங்களைப் படித்த திருடன் சம்பாதனை இல்லாமல் வெறுங் கையனாய்த் திரும்பக் கூடாதென்னும் நல்ல எண்ணம்! என்ன இவனுடைய மேன்மைக் குணம்! (அருகில் போகிறான்)
ஸோமே : (அரைத் துக்கத்தில் திருடனுடைய கையைப் பிடித்துக் கொண்டு) நண்பரே! என்ன உம்முடைய கை இவ்வளவு குளிர்ச்சியாய் இருக்கிறது?
சசி : (தனக்குள்) சே! நான் சுத்த முட்டாள் தண்ணீரில் கையை வைத்ததினால் என் கை குளிர்ந்திருப்பதை மறந்து விட்டேன். (கைகளை ஒன்றோடு ஒன்றைத் தேய்த்துச் சூடு உண்டாக்கிக் கொண்டு நகை மூட்டையை எடுக்கிறான்.)
ஸோமே : (அரை நித்திரையில்) மூட்டையை எடுத்துக் கொண்டீரா? .
சசி : (தனக்குள்) ஆகா இந்தப் பிராம்மணோத்தமரின் உபகாரத்தை என்ன என்று சொல்வேன்! (உரக்க) ஆம்! எடுத்துக் கொண்டேன்.
ஸோமே : (தித்திரை மயக்கத்தில்) அப்பா கவலை ஒழிந்தது! இனி நன்றாய்த் துங்குகிறேன்.