ஸோமே : என்ன பேசாமல் இருக்கிறாய்? பதிலாக அனுப்பப்பட்ட இதை வாங்கிக் கொள்ள மாட்டாயா?
வஸ : (புன்சிரிப்புடன்) ஏன் மாட்டேன்? (வைர ஸரத்தை வாங்கித் தன் மார்பில் வைத்துக் கொண்டு) இதென்ன அதிசயம் மாமரத்தில் இருந்து புஷ்பங்கள் எல்லாம் உதிர்ந்து போன பிறகு அமிர்தத் துளி விழுதலுண்டோ? நல்லது ஸோமேசரே! நான் இன்று சாயங்காலம் எஜமானர் வீட்டிற்கு வந்து பார்த்துப் பேசுவதாய்த் தெரிவியும்.
ஸோமே : (தனக்குள்) அப்படியா! அவரிடத்தில் இன்னம் அதிகமாகப் பொருள் பெற உத்தேசிக்கிறாள் போல் இருக்கிறது! இன்னம் கேட்டால் என்ன செய்வார்? பாவம் இதுவும் அவருக்குத் தலை விதியா! இரவில் வந்தாளே என்று உதவி செய்யப் போக, இந்தத் துன்பம் சம்பவித்தது! (வெளிப்படையாய்) அப்படியே தெரிவிக்கிறேன் அம்மா!
வஸ : நமஸ்காரம்; போய் வாருங்கள். (விஸனத்துடன் போகிறான்)
வஸ : (தனக்குள்) விருத்தம்: பியாக்
எங்ஙன முரைப்பேனிந்த வள்ளலின் பெருமை தன்னைச்
சிங்கவே றனைய ஆண்மை தெவிட்டிடா இனிய பான்மை
மங்கினு மகலாத் தூய்மை இடுக்கணு மதியா வாய்மை
துங்கமே யுருவாய் வந்த சுந்தரம் பொலிந்த மேனி.
ஆகா! என்ன உத்தம குணம்! எவனோ திருடிக் கொண்டு போனதை என்னிடத்தில் தெரிவிக்காமல் தான் சூதாடியதாகச் சொல்லித் தன் யோக்கியதையைக் குறைத்துக் கொண்டாயினும் தன் பேரில் வைத்த நம்பிக்கைக்குக் குறைவு வராமல் நடந்து கொண்டிருக்கிறாரே! இவர் அல்லவோ புருஷ சிங்கம்! இவர் அல்லவோ புருஷரில் சிரேஷ்டர்!