அதை அனுபவிக்க நான் கடமைப்பட்டவனே! ஆனால் இப்படிச் செய்ய வெட்கமாய் இருக்கிறது! வேறு ஏதாவது யோசனை சொல்.
மல்லி : நீர் ஒன்று செய்யும். இவைகளை எஜமானி அம்மாளிடம் திருப்பிக் கொடுக்கும்படி மாதவராயரால் அனுப்பப்பட்ட தூதனைப் போல் நீர் பாசாங்கு செய்து இவைகளை என் எஜமானி அம்மாளிடம் சேர்த்துவிடும்.
சசி : அப்படிச் செய்தால்?
மல்லி : நீர் திருடனாக மாட்டீர்; நகைகள் சொந்தக்காரரைச் சேர்ந்து விடும், மாதவராயருக்கும் நஷ்டமில்லாமற் போய் விடும். மூன்று பேருக்கும் இதனால் அனுகூலம்!
சசி : என் சம்பாத்தியத்தை இப்படி அபகரிப்பது திருட்டு அல்லவா?
மல்லி : ஒரு பொருள் அதன் சொந்தக்காரரைச் சேர்வது எப்படித் திருட்டாகும்? நீர் சொந்தக்காரருக்குத் தெரியாமல் இவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டதினாலேயே இவை உம்முடையவையாய் விட்டனவோ? வேண்டாம். வீண் வாதம் செய்யாமல் நான் சொல்வதைக் கேளும். இப்பொழுதும் மிஞ்சிப் போகவில்லை. நாம் செய்தது தவறு என்று தெரிந்தால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் நிவர்த்திக்கலாம். மானத்தையும் கீர்த்தியையும், யாவற்றையும் இழந்து பாவ மூட்டையை ஏன் சம்பாதித்துக் கொள்ளுகிறீர்? நான் சொல்வதைச் செய்யும். இது உமக்கு நன்மை தரும் இதன் பொருட்டு நானும் உம்மிடம் முன்னிலும் பதின்மடங்கு அதிகம் ஆசை வைப்பேன்.
வஸ : (தனக்குள்) பலே! மல்லிகா! உண்மை நண்பனைப் போல நன்றாய் இடித்துப் புத்தி சொல்லுகிறாய்! இவ்வளவு மேன்மைக் குணம் உன்னிடத்தில் இருக்கும் என்று நான் இது வரையில் நினைக்கவே இல்லை.
சசி : கண்ணே! மல்லிகா! நீ சொல்வது எல்லாம் உண்மையே! நான் ஏழ்மைத்தனத்தினால் இவ்விதம் செய்து விட்டேன்? செய்ததற்கு மிகவும் விசனப்படுகிறேன்! இனி நீ எப்படி நடக்கச் சொன்ன போதிலும் அப்படியே நான் செய்கிறேன், தடையில்லை.