சசி : அடி என் பிரிய மல்லிகா! இப்பொழுது நான் என்ன செய்கிறது?
மல்லி : அது உமக்குத்தான் தெரிய வேண்டும்.
சசி : அப்படி அல்ல! ஸ்திரீகளுக்கு இயற்கை சுபாவமே குரு. கல்வி மதங்கொண்ட புருஷர் புஸ்தகங்களில் இருந்து விஷயங்களைத் தெரிந்து கொள்ளுகிறார்கள். அப்படித் தெரிந்து கொள்ளப்படுபவைகளை அனுபவத்திற்குக் கொண்டு வரக் கூடாமல் தீய காரியங்களைச் செய்கிறார்கள். ஸ்திரீகள் எல்லாவற்றையும் தாமாக அறிந்து கொள்வதோடு, அவற்றை அனுபவத்திற்குக் கொண்டு வருபவர்களாயும் அதிகப் புத்திக் கூர்மை உடையவர்களாகவும் ஆகின்றனர். தானாய்க் கனியும் வாழைப் பழத்திற்கும் புகை போட்டுப் பழுக்க வைக்கும் வாழைப் பழத்திற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது! நீ தான் இப்பொழுது ஒரு யோசனை சொல்ல வேண்டும்!
மல்லி : அப்படியானால் நீர் உடனே திரும்பிப் போய் நகைகளை மாதவராயரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு வருவதே உத்தமமான காரியம்!
வஸ : (தனக்குள்) பலே! மல்லிகா! கேவலம் அடிமையாய் இருந்தாலும் உனக்கு எவ்வளவு கண்ணியமான புத்தி! ஆகா! அதிர்ஷ்டம் ஒன்று தான் பக்ஷபாதமுடையது. அது தனவந்தர்களிடத்திலேயே விருப்போடு செல்கிறது! அது ஏழைகளிடத்திலும் இருக்கிறது. தனவான்களிடத்திலும் இருக்கிறது! நன்றாய் ஆழ்ந்து பார்த்தால் ஏழைகளிடத்திலேயே நற்குணம் அதிகமாய் இருக்கிறது!
சசி : மல்லிகா! நல்ல யோசனை சொன்னாய்! நான் திருடனென்று நேரில் அங்கு போனால் என்னை உடனே அதிகாரிகளிடம் ஒப்புவித்துவிட மாட்டாரா?
மல்லி : ஆகா! நல்ல பைத்தியம்! சந்திரன் எப்பொழுதாகிலும் சுடுதலுண்டோ? ஒரு நாளுமில்லை.
சசி : அவருடைய சாந்த குணத்தைப் பற்றி நான் சந்தேகப் படவில்லை. தவிர நான் எந்தக் காரியத்தைத் துணிந்து செய்கிறேனோ அதனால் உண்டாகும் பலன் எதுவாய் இருந்தாலும்