மனதில் ஏதாவது ஒரு நற்குணம் இருக்குமோ என்று எவ்வளவு சோதனை செய்தாலும் உள்ளே இருப்பது குதிரைக் கொம்புதான். அந்த துஷ்டன் மாதவராயனையா நீ விரும்புகிறாய்? இந்த சங்கதி முன்னால் தெரிந்திருந்தால், அவனை ஒரே குத்தில் கொன்று விட்டு வந்திருப்பேனே! இப்பொழுதே போய் அவன் உயிரை வாங்கி விட்டு வருகிறேன். (புறப்படுகிறான்)
மல்லி : (அவனைப் பிடித்துக் கொண்டு) என்ன பிரமாதமாக உளறுகிறீரே! தலை கால் தெரியாமல் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறீர்? உயர் குலத்திற் பிறந்த பிராமணராய்
இருந்தும், திருடினேன் என்றும் குத்துகிறேன் என்றும் சொல்லுகிறதற்கு வெட்கமில்லையா? (முகத்தில் இடிக்கிறாள்)
சசி : எல்லாம் யார் பொருட்டு? உனக்காகத்தானே! நான் உனக்காக இவ்வளவு தாழ்வடைவதையும் நீ நினைக்காமல் மாதவராயனுக்குப் பரிந்து பேசுகிறாயே!
மல்லி : உண்மை அதுவல்ல. இந்த ஆபரணங்கள் என்னுடைய எஜமானி அம்மாளுக்கு சொந்தமானவை.
சசி : என்ன ஆச்சரியம்! உன் எஜமானியின் நகைகள் அங்கு போனதின் காரணமென்ன!
மல்லி : ஒரு நாளிரவு திருட்டுக்குப் பயந்து, மாதவராயரிடத்தில் வைத்து விட்டு வந்தார்கள்.
சசி : அப்படியா! உன்னுடைய எஜமானியின் நகைகளா இவைகள் ஆகா! தெரியாமலல்லவோ திருடி விட்டேன்! என்ன செய்வேன்?
வஸ : (தனக்குள்) எவ்வளவோ கெட்டவனாய் இருந்தாலும் இவனிடத்திற் கழிவிரக்கங்கூட இருக்கிறதே! சே! மோகம் பொல்லாதது! அதனால் எவ்வளவு நற்குணமுடையவன் கூட, என்னென்ன தீய காரியங்களைச் செய்ய நேருகிறது! மோகத்தினால் நான் படும் பாட்டில் இருந்தே இவனுடைய நிலைமை எப்படி இருக்கும் என்பது நன்றாய்த் தெரிகிறது! ஐயோ பாவம்! என்ன செய்வான்!