சசி :
சுந்தரியே எனதாருயிர் நீ யெனை
நிந்தித்தலோ முறையே?
சொந்த மனைவி யென நின்னை நாடினேன்
கோபம் விடுவிப்பாயே.
அக்கிரமம் செய்தாலும் நான் நன்றாய் யோசித்துத்தான் செய்வேன். நான் ஸ்திரீகள் குழந்தைகள் முதலியோரிடத்தில் இருந்து திருடவில்லை. தானதருமங்களுக்காகச் சேகரம் செய்து வைக்கப்பட்டிருந்த பொருளைக் களவாடவில்லை. விலைக்கு விற்று விடும் பொருட்டுக் குழந்தைகளைத் திருடிக் கொண்டு வந்து விடவில்லை. இதோ நான் கொணர்ந்திருக்கும் ஆபரணங்களை உன் எஜமானியிடம் கொடுத்து உன்னை விடுவித்துக் கொண்டு வந்துவிடு. ஆனால் இவற்றை எப்பொழுதும் பெட்டிக்குள் ஜாக்கிரதையாக மறைத்து வைத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும்.
மல்லி : அணிந்துக் கொள்ளத் தகாத ஆபரணங்களால் என் எஜமானி அம்மாளுக்கு என்ன பிரயோஜனம்? எங்கே? நகைகளைக் காட்டும்; பார்க்கலாம்.
சசி : இதோ பார் (காட்டுகிறான்)
மல்லி : ஹா! இதென்ன ஆச்சரியம்! இவைகளை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே! (யோசனை செய்கிறாள்) நீர் எங்கிருந்து இவற்றை எடுத்து வந்தீர்!
சசி : அதைப் பற்றி உனக்கு என்ன கவலை? உன்னை வடை தின்னச் சொன்னார்களா? அல்லது அதில் இருக்கும் துளைகளை எண்ணச் சொன்னார்களா? கேள்வி ஒன்றும் கேட்காமல் எடுத்துக் கொண்டு போ.