வஸ : மல்லிகா!
மல்லி : ஏன் அம்மணி!
வஸ : உன்னைக் கூப்பிடவில்லை? இவர் கேட்டதற்குப் பதில் சொன்னேன்.
சசி : சொன்ன பதில் இன்னதென்று விளங்கவில்லையே!
வஸ : ஏன் விளங்கவில்லை! விவரமாய் சொல்லுகிறேன் கேளும். நானும் மாதவராயரும் எங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்து கொண்டோம். இவ்வாபரணங்களை அவர் யார் மூலமாய் எனக்கு அனுப்புகிறாரோ அவருக்கு மல்லிகாவை நான் சன்மானமாகக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். ஆகையால் தயவு செய்து இந்த மடந்தையை ஏற்றுக் கொண்டு, இந்தப் பாக்கியம் பெற்றதற்காக மாதவராயரை மனதாற் துதியும். இப்பொழுது நன்றாய் விளங்குகிறதா?
சசி : (திடுக்கிட்டு) தனக்குள் ஓகோ! இரகசியம் தெரிந்து போய் விட்டால் போல் இருக்கிறதே! இதுவும் பாக்கியந்தான் (வெளிப்படையாக) மாதவராயருக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும். உண்மை யோக்கியதை இல்லாத அரசனைக் காட்டி லும் அதைப் பெற்ற தரித்திரனே பெருத்த தனவந்தனாகையால், நற்குண நல்லொழுக்கத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியது மனிதருடைய முதற் காரியம். அதை உடையவனுக்குக் கிடைக்காத பொருள் இல்லை. பிரகாசம் பொருந்திய சந்திரன் தன்னுடைய யோக்கியதையினால் அல்லவோ, பரம சிவனுடைய சிரசில் இருக்க இடந்தேடிக் கொண்டான். ஆகா! கடைத்தேறினேன். சற்குருவாகிய உன்னால் நான் இப்பொழுது நல்லொழுக்கத்தின் மகிமையை உணர்ந்தேன். இனி நான் நீதி நெறி பிசகாமல் ஒழுகுவேன். இது சத்தியம்.
வஸ : பிரியஸ்கி மல்லிகா! இவருடன் புறப்படு நான் உன்னை இவருக்குச் சன்மானம் செய்து விட்டேன். எங்கே நிமிர்ந்து பார் என்னை மறந்து விடாதே. (கண்ணீர் ததும்புகிறது)
மல்லி : (அழுதவண்ணம்) ஐயோ! அம்மணி! என் பேரில் தங்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லையே! என் அருமைத் தாயே! என்னை இப்படி விலக்க வேண்டாம். நான் ஏதாவது