(Reading time: 13 - 25 minutes)

சிறுகதை - வீராங்கனை! - ரவை

" ம்மா! ஏம்மா அப்பா இன்னும் தூங்கறாரு? நீ ஏம்மா அழுவறே? சொல்லும்மா!"

 ஏதுமறியா அந்த பாலகனின் கெஞ்சலுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமலும், இவ்வளவு சிறிய பாலகனை விட்டுச் செல்ல, தன் கணவனுக்கு எப்படி மனம் வந்தது என்றும் பிரமீளா ஓவெனக் கதறினாள்.

 " சொல்லும்மா! கூப்பிட்டாக்கூட, அப்பா ஏம்மா பேசாம, பார்க்காம, தூங்கறாரு?"

 " கண்ணே! அப்பா செத்துப் போயிட்டார்டா!"

 " அப்படீன்னா?"

 " அப்பா இனிமேல் உன்னோட, என்னோட, யாரோடும் பேசமாட்டாரு, கண்ணைத் திறக்கமாட்டாரு, எழுந்திருக்கமாட்டாரு......"

 " ஏம்மா! நம்ம எல்லார்கிட்டயும் அப்பாவுக்கு கோபமா?"

 " கோபமில்லே, நமக்காக பரலோகம் போய் நிறைய நல்லது செய்யப் போயிருக்காருடா......."

 " அப்ப, திரும்பி வருவாரில்லே........?"

 அதற்கு என்ன பதில் சொல்வதென புரியாமல், பிரமீளா பூசையறையில் மாட்டியிருந்த சாமி படத்தை பார்த்தாள், சாமி சிரித்துக் கொண்டிருந்தது!

 " ஏன்யா! எங்க தலையிலே கல்லை தூக்கிப்போட்டது போதாதுன்னு, எங்களைப் பார்த்து கேவலமா சிரிக்கிறியா? உனக்கு ஏழைங்கமேல இரக்கமே கிடையாதா? பணக்காரங்களுக்கு வாரி வாரி அள்ளி அள்ளி கொடுக்கறே, ஏழைங்களை மட்டும் வாட்டி வதைக்கிறியே, ஏன்யா உனக்கு இந்த ஓரவஞ்சனை?"

 சாமி தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது!

 பிரமீளா ஆத்திரமுடன் எழுந்து அந்த சாமி படத்தை வெளியே எடுத்து கீழே போட்டு உடைத்து காலால் மிதித்தாள்.

 படத்திலிருந்து உடைந்த கண்ணாடி துகள் அவள் காலை கீறி ரணப்படுத்தியது.

 " அம்மா! உம்மாச்சியை ஏம்மா கீழே போட்டு உடைக்கிறே? கண்ணை குத்திடுவாரும்மா!"

 " அவர்தான்டா முதல்லே, நம்ம கண்ணை குத்திட்டாரு, அதற்கு பதிலாத்தான்டா நான் அவர் படத்தை உடைச்சேன்....."

 " அம்மா! சாமி நல்லவரும்மா!"

 " எப்படிடா சொல்றே?"

 " நீ அவரை கீழே போட்டு உடைச்சாலும், அவரு உன்னை கோவிச்சிக்காம, இன்னமும் சிரிச்சிகிட்டே இருக்கார், பாரேன்!"

 பிரமீளா, பாலகனின் பேச்சைக் கேட்டு, ஆடிப் போய்விட்டாள். பேசுவது, பாலகனா, சாமியா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.