"அதில ஒரு ஐநூறு ரிங்கிட் கொண்டாந்து கொடுங்களேன்! "
மூர்த்தி போய்விட்டார். ராஜியின் மனதுக்குள் இடையறாத அந்தத் துயரச் சுழலிலும் ஒரு நல்ல உணர்வு குமிழியாக மேலே மிதந்து வந்தது.
*** *** ***
கடுகடுப்பும் எடுத்ததெற்கெல்லாம் எரிந்து விழுதலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் குடும்பத்தைக் குலைத்தவள் என்ற ஏச்சுக்களும் கணவன் கட்டிலறையில் கட்டையாக விறைத்துப் போய்க் கிடத்தலும் என்று ஆறுமாதங்கள் அந்த வீட்டில் புயல் அடிப்பதும் அப்புறம் பனிக்கட்டியாக உறைந்து போவதுமாக காலம் ஓடிற்று. மாமியாரின் புறக்கணிப்பையும் கோபத்தையும் பொறுக்க முடியாமல் ராஜி குழந்தைகளை அந்த மூன்றாம் வீட்டு பார்வதி அத்தையிடம் அடிக்கடி விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அப்புறம் காயங்கள் கொஞ்சம் ஆறி குடும்பம் நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கியிருந்தது. பாஸ்கரன் அந்த வீட்டில் இல்லாமல் போனதால் கொஞ்சமாக சுதந்திரக் காற்றுக் கூட வீசத் தொடங்கியிருந்தது. மாமியார் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளத் தொடங்கியிருந்தாள். ஆனால் ராஜியோடு பேசுவது அடியோடு குறைந்து விட்டது. சேகரன் வீட்டு விஷயங்கள் பற்றி மட்டும் பேசுவான். இரவில் அவனுடைய அணைப்புக்கள் இயந்திரத் தனமாக இருந்தாலும் முறையாக நடந்தன.
பத்மாவை இருமுறை ரகசியமாகப் போய்ப் பார்த்து வந்தாள் ராஜி. முதன் முறை போகும் போது அவளை இருள் படிந்த அறைக்குள் விலங்கு போலக் கட்டிப் போட்டிருப்பதை கற்பனை செய்துகொண்டு போன அவளுக்கு இன்பமான அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளங்குற்றவாளிகள் நிலையம் பிரகாசமாக இருந்தது. கடுமையும் கண்டிப்பும் இருந்தாலும் மனவளர்ச்சியை அதிகரிக்கும் பாடங்களும் கைத்தொழில்களும் கற்றுக் கொடுத்தார்கள். ஓர் இந்து சமயப் பிரச்சாரகர் வாரம் ஒரு முறை வந்து தேவாரம் திருவாசகம் கற்றுக் கொடுப்பதாகக்கூட ராஜி அறிந்து கொண்டாள்.
பத்மா சந்தோஷமாக இருந்தாள். அக்காவைப் பார்த்து முதலில் வாய்நிறையச் சிரித்தவள்