அப்புறம் தான் அநியாயமாகத் தனிப்படுத்தப் பட்டதை எண்ணியோ என்னவோ ஓவென அழுதாள். இந்தச் சின்னப் பிள்ளையைத் தாயாக இருந்து தன்னால் அன்பாக வளர்க்க முடியவில்லையே என ராஜியும் அழுதாள்.
பத்மா அந்தப் பள்ளியிலுள்ள எல்லாரையும் கவர்ந்திருந்தாள். ராஜி சந்தித்த மலாய், சீன அதிகாரிகள் அவள் மிகவும் ஒழுக்கமான பெண் எனவும் பள்ளியில் மிக உதவியாக இருக்கிறாள் எனவும் சொன்னார்கள்.
ஆனால் இந்த இளந்தளிரைச் சுற்றிச் சில பயங்கரமான இளம் பெண் குற்றவாளிகள் இருந்தார்கள். விபச்சாரிகளாகவும் குழந்தைக் கொடுமை செய்தவர்களாகவும் பழக்கப்பட்ட திருடர்களாகவும் போதைப் பொருள் பழக்கம் உள்ளவரள்களாகவும் பலர் இருந்தார்கள். அவர்களைப் பற்றி பத்மா கதை கதையாகச் சொன்னாள். இவர்களிடம் காயப்பட்டு பத்மா மனத்தழும்புகள் இல்லாமல் மீண்டு வர வேண்டுமே என்று ராஜி கவலைப்பட்டவாறு திரும்ப வந்தாள்.
*** *** ***
பத்மா இல்லாமற்போன இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டார் ரூமில் அடையத் தொடங்கிவிட்ட பழைய சாமான்களை அகற்றிக் கூட்டிச் சுத்தப் படுத்தினாள் ராஜி. தண்ணீர் விட்டுக் கழுவும்போது கொஞ்சம் ரத்தக் கறையும் கொஞ்சம் விந்துக் கறையும் கூட இன்னும் இருப்பது போல அவளுக்குப் பட்டது. அது வெறும் மனப்பிரமை எனச் சொல்லிக் கொண்டாள். இரண்டு பலகைகள் வைத்து ஒரு பாயை விரித்தவுடன் அது படுக்கையாயிற்று. தனது இரண்டு தலையணைகளில் ஒன்றைக் கொண்டு வந்து போட்டாள். மங்கலான பழைய பல்பு ஒன்று இருந்தது. போதும்.
மாமியார் கொஞ்ச நேரம் நின்று முறைத்துப் பார்த்து விட்டுப் போனாள். அப்புறம் ஏதோ முனகியவாறு பாத்திரங்களைக் கழுவும் சாக்கில் சத்தமாக உருட்டிக் கொண்டிருந்தாள்.
ராஜி பிற்பகல் வேலைக்குப் போய் ஏழு மணி வாக்கில் வீடு திரும்பிய போது சேகரன் வந்து விட்டிருந்தான். வீட்டுக்குள் நுழையும் போதே அவன் முகம் கடுகடுத்திருந்தது அவளுக்குத் தெரிந்தது. குழந்தைகள் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவள் தனக்குத் தேநீர்