அந்த வார இறுதியில் அனன்யாவுடன் வெளியில் செல்லலாம் என முடிவெடுத்து இருந்தான் அஷ்வின். 6.45pm… அனன்யாவை அழைத்து செல்வதற்காக வீட்டிற்கு வந்தவனை பூட்டிய வீடே வரவேற்றது. “அனன்யா… அனன்யா” இயன்றவரை குரல் கொடுத்து பார்த்தான் அவன்.. பதில் இல்லாமல் போகவும், தன்னிடம் இருந்த சாவியை கொண்டு பூட்டை திறந்து உள்ளே வந்தான் அஷ்வின்.
“எங்க போனா இவ ? “ என்று வாய்விட்டே கேட்டப்படி வீட்டிற்குள் ஒவ்வொரு அறையாய் தேடினான்.. அனன்யாவின் செல்போன் வீட்டில் இருப்பதைக் கண்டான். அருகில் இருக்கும் கடைக்கு சென்றிருப்பாள் என்றெண்ணியவன், வெளியில் செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தபோது, ஏதோ விநோதமாய் இருப்பதைப் போல உணர்ந்தான் அவன். ஏதோ துர்நாற்றம், அவன் நாசியை தொட்டது.. அது என்னவாக இருக்கும் என்றவன் யோசிக்கும் முன்னரே “க்க்கிரீச்ச்ச்” என கதவு மூடும் சத்தம் கேட்டது.. “யாரு ??” என்று அவன் திரும்பிய நேரம் அவன் தலையில் ஏதோ பலமாய் அடித்தது போல இருந்தது.. “ஸ்ஸ்ஸ்ஸ் ஆஅ” வென அஷ்வின் அலற அதே நேரம், கதவை திறந்து வந்தாள் அனன்யா..
“ ஹேய் நாந்தான் டா” என்று ஓடி வந்தாள் அனன்யா.. லேசாய் முகம் வியர்த்து போய் நின்ற கணவனை பார்த்து “ ஹேய் என்னாச்சுடா ?” என்றாள்..
“ ஒன்னும் இல்லடீ.. இடிச்சுகிட்டேன்… எரும, கேஸ் ஸ்மெல் வருதுடீ போயி முதலில் கிச்சனை பாரு”.
அவன் குரலில் இருந்த பதட்டம் அவளை தொற்றிக்கொள்ள சமையலறைக்கு ஓடினாள் அனன்யா. அஷ்வின் கூறியது போலவே சமையலறையில் அடுப்பில் தீ அணைக்கபடாமல் இருந்தது.
“ ஓ மை காட்..எப்படி இது நடந்துருக்கும் ..நான் வெளில போறதுக்கு முன்னாடி அடுப்பை ஒழுங்கா ஆஃப் பண்ணிட்டுதான் போனேன் டா”
“ உன் ஒழுங்குல தீய வைக்க” என எரிந்து விழுந்தான் அஷ்வின்.
“ஹேய் இல்லடா,ஒருவேளை வேலைக்கார அம்மா தெரியாமல் சரியா ஆஃப் பண்ணாம போயிருப்பாங்க.. சாரி டா..நீ டென்ஷன் ஆகாத..எனக்கு பயம்மா இருக்கு” என்றாள் அனன்யா உள்ளே போய்விட்ட குரலில்.! அவள் கொஞ்சம் பயந்தே குரலில் பேசினாலே அவன் கோபத்தை கைவிட்டு விடுவது எப்போதும் நடக்கும் வழக்கமான ஒன்றுதான்..இப்போதும்,
“ஹேய் செல்லக்குட்டி..கோபம் எல்லாம் இல்லடீ.. கேஸ் விஷயம்ல..சரி சரி வா கெளம்பலாம். இன்னைக்கு நாம ரெட் கலர் காஸ்டியூம் போடலாம்னு ப்ளான் பண்ணினோம்ல, வா வா ட்ரெஸ் மாத்தலாம்” என்று சமாதானம் ஆகிவிட்ட குரலில்பேசி அவளை அறைக்கு அழைத்து சென்றான்.. வாசல் வரை அவன் தோள் வளைவில் உரிமையாய் சாய்ந்து கொண்டு வந்தவள் அவனை வாசலிலேயே நிறுத்தினாள் அவள்.
“ முதல்ல நான் போயி ட்ரெஸ் மாத்துறேன்..அப்பறமா நீ மாத்து.. குட் பாய்ல இங்கயே நில்லு” என சிரித்தபடி கதவை தாழிட்டு கொண்டாள் அனன்யா.
“ என்னடீ புருஷனையே உள்ள விட மாட்டுற? கதவை திறடீ.. இல்லன்னா கோர்ட்ல கேஸ் போடுவேன் உன்மேல” என்றான் அஷ்வின் தீவிரமாய்.
“ நீ கேஸ் போட்டா, வாய்தா மேல ‘வாய்’தா தான் வாங்குவ” என்று அனன்யா இருபொருளில் கூற,
“ அப்போ கண்டிப்பா, கேஸ் போடுறேன்” என குறும்பாய் சிரித்தான் அஷ்வின்..
“இப்போ கதவை திறக்க போறியா இல்லையா நீ ?” என்று அவன் செல்லமாய் அதட்டவும்,”முடியாது போடா” என்று உடனேபதில் வந்தது அவளிடமிருந்து ! “சரிதான் போடீ” என்று விட்டு வேறு புறமஷ்வின் திரும்ப, மஞ்சள் நிறத்தில் இரு விழிகள் அவனை அச்சுருத்தியன. ஒரு கணம் தூக்கி வாரி போட, லேசாய் மிரண்டு விட்டான் அஷ்வின்.. “மியாவ்” என்று அந்த பூனை ஓசை எழுப்பவும் தான் “ச்சீ..பூனையா ?”என்றவாறே அதை விரட்டி விட்டு தன்னை நினைத்து சிரித்துக் கொண்டான்.. “ஹா ஹா ..ச்ச… நல்ல வேளை யாரும் இதை பார்க்கல” .
அதன்பின் கணவன் மனைவி இருவரின் சந்தோஷத்தை எந்தவொரு அமானுஷ்யமும் தடுக்காமல் இருக்க, அன்றைய தினம் இனிமையாகவே கழிந்தது.
திங்கள் கிழமை…காலையில் வழக்கம் போல உறங்கிகொண்டிருந்த அனன்யாவை தொந்தரவு செய்யாமல் காஃபி போட்டு கொண்டு வந்தான் அஷ்வின். காற்றில் அசைந்த அவளது கற்றை கூந்தலை மென்மையாய் ஊதி ஒதுக்கிவிட்டு பட்டும்படாமல்,அவளது பட்டு கன்னத்தில் முத்தமிட்டான்.. அதற்கு அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை..”கும்பகர்ணி” என்று அவளுக்கு பட்டபெயர் சூட்டினான்..
“ அடியே, எந்திரி டீ சோம்பேறி” என்றவறே அவளை உலுக்க லேசாய் முனகியப்படி மீண்டும் உறங்க முயற்சித்தாள் அனன்யா.
“ எங்க அம்மா அப்போவே சொல்லிச்சி, சொந்தத்துல அந்த பொண்ணு பேரு என்ன… ஆங்…. செல்ஃபி (selfie) ச்சி, செல்வி அத கட்டி இருந்தா இந்நேரம் காஃபி போட்டு என்னை எழுப்பி இருக்கும்.. எல்லாம் என் தலையெழுத்து” என சத்தமாகவே முணுமுணுத்தான் அஷ்வின்.