" அடடே சீக்கிரம் வந்துட்டியா .. எப்போடா வந்த ?" என்று புன்னகைத்தார் அவன் தந்தை .. அவர் சந்தோஷத்திற்கு எதிர்மாறாய் கொதித்து கொண்டிருந்தவன் , அவருக்கு பதில் சொல்லவில்லை ..
" அனன்யா எங்கப்பா ? "
" அதோ பாரு அம்மா கூடத்தான் வர்றா " என்று அவர் கை காட்டவும் , மின்னல் வேகத்தில் மூச்சிறைக்க அவள் முன் நின்றான் ..
" எங்க டீ போன ? போன் பண்ண எடுக்க மாட்டியா நீ ?" என்று கோபத்துடன் அதட்டினான் அவன் .. அனன்யா பதில் கூறும் முன்னரே இடை புகுந்தார் அவன் அன்னை ..
" நான்தான்டா போனை வெச்சு இருந்தேன் ..இந்த போன் ல எப்படி பதில் சொல்லுறதுன்னு தெரியல .. " என்றார் அவர் .. அவர் பதிலில் அவன் சமாதானம் அடையவில்லை என்பது அவன் முகத்திலேயே தெரிந்தது ..
" வாங்க உள்ள போலாம் " என்று அவன் தந்தை குரல் கொடுக்கவும் , அமைதியாய் பின்தொடர்ந்தான் அஷ்வின் . அவள் வந்துவிட்டாள் என்று லேசாய் நிம்மதி அடைந்தவனின் கண்களில் களைந்து கிடந்த துணி மணிகள் தென்படவும், " துணி எல்லாம் இப்படி களைஞ்சு கிடக்கு .. உங்களையும் காணோம் ... போன் பண்ணினாலும் எடுக்கல ..பயந்தே போயிட்டேன் தெரியுமா ?" என்று உளறினான் ..
" இல்ல டா , அம்மா அப்பா காலைல மாமாவை பார்க்க போனாங்க .. இவினிங் வரும்போது ரூட் மாறி போயிட்டாங்க .. அதான் நான் அவசரத்துல துணி எல்லாம் சோபா மேல போட்டுட்டு போயிட்டேன் ... ஆனா நான் களைச்சி போடலியே டா " என்றாள் .
" காத்துல கலைஞ்சிருக்கும் அனன்யாம்மா .. அஷ்வின் பசியில இருப்பான் .. போயி காபி போடு போ " என்று அவன் தாயார் கூற,
" ஹான் சரிம்மா .. அப்படியே அப்பாவுக்கு சுகர் இல்லாத காபி , உங்களுக்கு ஒரு சொம்பு தண்ணி " என்று அவள் சரியாய் கூறினாள் ..
" அதான் என் மருமக .. " என்று அவர் சிலாகித்து கொள்ள அனைவருமே சிரிக்க அஷ்வின் மட்டும் அவர்களின் சிரிப்பில் இணைந்து கொள்ள முடியாமல் இருந்தான் ... அவர்களின் முன்னிலையில் தனது மனநிலையையும் காட்டிக் கொள்ள அவன் விரும்பவில்லை..எதுவும் பேசாமல், அனன்யாவை தொடர்ந்து கொண்டே சமையலறைக்குள் புகுந்தான். தன் பின்னே வந்த கணவனை இறுக அணைத்து கொண்டாள் அனன்யா ..
" டார்லிங் ..என்னாச்சு டா ..உன் முகமே சரி இல்லையே..என் மேல கோவமா ? "
" அட… அது இல்லடீ உங்களை காணோம் .. நீ வேற போன் எடுக்கல ..பயந்துட்டேன்டீ ". அவன் குரலில் இருந்த நடுக்கம் அவளையும் அசைத்தது .. "
“ என்ன இவன் ? மற்ற நேரத்தில் எல்லாம் வாய் வாசப்படி தாண்டும் .. ஆனா , இப்படி என் விஷயத்துல இவ்வளவு வீக்கா இருக்கான் ?" என்று நினைத்தவள் , நிமிர்ந்து அவனது முகத்தை கைகளில் ஏந்தியப்படி பேசினாள்.
" ஷ்ஷ்ஷ்ஷ் .. நீ இருக்கும்போது எனக்கு என்னடா நடக்கும் ..? சாரி டா உனக்கு மெசேஜ் பண்ணி இருக்கலாம் தான் .. பட் அப்பா அம்மா கூப்பிட்ட அவசரத்துல அப்படியே கெளம்பிட்டேன் .." ..அவள் குரலில் இருந்த குற்ற உணர்ச்சியில் அவனது பயம் மொத்தமும் தற்காலிகமாய் மறந்தே போனது .. அவள் தோளில் போட்டிருந்த கைகள் இப்போது அவளது இடையை பற்றின..
" ஹ்ம்ம் இப்படியே இருந்தா என்னென்னமோ ஆகுமே டீ " என்று கண்ணடித்தான் அஷ்வின்.
" ச்சீ ... போடா அம்மா அப்பா இருக்காங்க "
" இருக்கட்டுமே "
“அச்சு…வேணாம்” என்று அவள் பின்னே நகர, “ஹாஹா “ என்று சிரித்தபடி முன்னேறியவன் அவளை முத்தமிட்டான் ..
அன்றிரவு .. !
மீண்டும் அதே மஞ்சள் நிற கண்களுடன் உருத்து விழித்த பூனையை கண்டான் அஷ்வின் .. அதை கை நீட்டி விரட்டி விட்டவன், அதன் பின் எதையும் ஆராய்ச்சி செய்யாமல் இயல்பாகவே இருந்தான் .. நால்வரும் கேலியும் கிண்டலுமாய் பேசி சிரித்து கொண்டே , இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் சென்றனர் ..
சுமார் 2 மணியளவில் , தாகத்தினால் கண் விழித்தான் அஷ்வின் .. அருகில் இருந்த பாட்டில் காலியாக இருக்கவும் , எழுந்து செல்ல சோம்பலாய் இருக்கிறதென்று மீண்டும் படுத்து கொண்டான் ..
" டேய் சோம்பேறி ..எழுந்து போயி தண்ணி குடிடா " என்று அனன்யா உறக்கத்திலேயே அதட்டல் போட்டாள் .. எழுவதற்கே மனமே இல்லாமல் எழுந்து தண்ணீர் குடித்தவன் , ஏதோ சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளிவந்தான் .. யாரோ சுவாசிக்கும் ஓசை, ஏதோ திணறல் போல அவனுக்கு கேட்டது .. தந்து பெற்றோராய் இருக்குமோ ? என்று பயந்தபடி அவர்களது அறைக்கு அருகில் சென்றான் அஷ்வின் .. ஆனால் சத்தம் வரவேற்பு அறையில் இருந்து வந்தது .. பூனைபோல காலடிகளை வைத்து அவன் பார்வையை தீட்டி கொண்டு அங்கு பார்க்க , ஏதோ பாடலை கேட்டு தலை அசைப்பது போல தலை அசைத்து கொண்டு அமர்ந்து இருந்தது அந்த உருவம் ..