“விக்கி ரொம்ப பயமா இருக்கு!” செல்வியின் குரல் ஈனஸ்வரத்தில் வர உள்ளம் பதறிபோனான், அடுத்த நிமிடத்தில் அவள் பற்றியிருந்த மண் நெகிழ தண்ணீருக்குள் சரிந்தாள், அடுத்த நொடி தாமதிக்காது, அதனுள் குதித்தான் விக்னேஷ்.
ஒரு சில நிமிடங்களில் ரிஷியும் கோபியும் அருகே உள்ள சிலரும் சேர்ந்து விக்னேஷ் பள்ளத்திளிருந்து வெளி வர உதவினர், செல்வியையும் தூக்கிக்கொண்டு அவன் மேலேரும்போது அவள் முற்றிலும் மயங்கிய நிலையில் இருந்தாள். தாமதிக்காது மருத்துவமணைக்கு சென்றனர், ஒரு சில சிறிய காயங்கள் தான், ஆனால் அதற்கே பதறி அவள் அருகே துடித்துக்கொண்டிருந்தவனின் கைகளை அவள் அறியாது பிடித்துக்கொண்டாள் செல்வி. மயக்க நிலையிலும் அவள் அறியாது அவள் மனம் விக்னேஷின் பெயரைத்தான் உச்சரித்தது. அவளது கையைப்பற்றியிருந்தவன் அவன் பிடியைத் தளர்த்தவே இல்லை. ஒவ்வொரு முறை அவன் பெயரை அவள் முனங்கும்போதும் வருத்தமும் காதலுல் ஒருங்கே உள்ளத்தில் பரவியது.
அவர்களுக்கான தனிமையை விட்டு கோபியும் ரிஷியும் வெளியே வந்தனர்.
கோபி ரிஷியிடம்…
“நல்ல வேளை, பெரிய அடி ஏதுமில்ல சார், விக்கி சார் கிடைக்க அவங்க கொடுத்து வைக்கனும் இல்ல சார், இப்படியா பள்ளத்தில குதிப்பாரு..நான் கொஞ்சம் பயந்துட்டேன், பைத்தியக்காரத்தனம்னு கூட தோணுச்சு, ஆனா இப்ப இவங்களப்பார்த்தா புரியுது.. அக்கா இல்லாம சார் கொஞ்ச நேரம் கூட இருக்கமாட்டாருனு..எப்ப சார் அவங்க கல்யாணம்?” இயல்பாய் கேட்டான், ரிஷிக்கு நிம்மதியாய் இருந்தது..
“சீக்கிரமே… நாம கிளம்புவோமா?”
“இவங்கள இப்படியே விட்டுட்டா?”
லேசாய் சிரித்தவன், “இனிமே நாம தேவயில்ல அவங்களே பார்த்துப்பாங்க..!”
இருவரும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தனர்.
படுக்கை அறையின் பூட்டிய கதவுகளின் உட்புறம் கதவில் தலையை சாய்த்து கண்கள் மூடி நின்றாள் தர்ஷினி. வீட்டின் முன்னறையில் மாணிக்கம் காவ்யாவிடம் பேசுவது தெளிவாக காதில் விழுந்தது. மாணிக்கத்திடம் அவள் பேசி ஒரு வாரம் கடந்திருக்கும், இயந்திரகதியாய் வீட்டிற்குள் நடந்த அவள் இந்த நாட்களில் உயிரற்ற பதுமையாய் தான் இருந்தாள். மாணிக்கம் அவளுடன் பலமுறை விவாதித்து அவளிடம் பெற முடியாது போன பதில்களில் அவளது மன அழுத்தத்தை உணர்ந்திருந்தார். அவரும், தான் லேசுபட்டவர் இல்லை என்பதை அவளுக்கு அவ்வப்போது காட்டிக்கொண்டிருந்தார் தான்.
“அங்கிள் இவ்வளவு தூரம் நடந்திருக்கு, இன்னும் இங்க தர்ஷினிய வச்சிருக்கிறது எனக்கு சரியாப்படல..!” – காவ்யா
“அவள நான் ஒன்னும் அடச்சு வைக்கல, அவதான் வேலைக்கு கூட போகாம, இங்கேயே இருந்து சாதிக்கனும்னு நினைக்கா.. இருக்கட்டும் அவளுக்கு வயசு இருபத்தஞ்சுனா எனக்கு அறுபது…”
“அங்கிள் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க நீங்க இப்படியே உட்கார்ந்து இருந்தா இது மாறவே மாறாது அவள பத்தி உங்களுக்கு தெரியும், சரியான அழுத்தக்காரி, போதாததுக்கு பக்கத்திலே அவரு வீட்ட கட்டி வச்சிருக்காரு, இதுல எந்த லட்சணத்தில இவ மாருவானு நீங்க நினைக்கீங்க?”
மாணிக்கம் இப்போது தாடையைத்தடவி யோசித்தார்.
“உன் வீட்டுக்கு அழைச்சுட்டுபோய் எடுத்து சொல்லுமா!”
“கிழிஞ்சுது போங்க, ரொம்ப சுத்தம், அம்மா அப்பா பாதி நாள் வீட்டில இருக்கிறதில்ல, அப்படியே இருந்தாலும், அப்பாக்கு லீகல் டிஸ்கஷன் அது இதுனு ஏதாவது ஒரு டிஸ்கஷன் சிவா கூடத்தான் இருக்கும் அங்கிள், இதுல நாம தர்ஷூவ அங்க வைக்கிறது இன்னும் ஆபத்தில்லையா?”
மாணிக்கத்தின் முகம் சோர்ந்து போனது, காவ்யாவுக்கும் அது வருத்தமாய் தான் இருந்தது.
“என்னம்மா இப்போ பண்றது?” அவர் சோர்வாய் கேட்டார்.
“அங்கிள், இப்போதைக்கு, ரிஷியோட கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில தான், நான் வேணும்னா, அங்க கூட்டிட்டு போறேன், ஆக்சுவல, ரிஷி கூட இப்போ கால்ல அடிபட்டதால அங்க தான் ரெஸ்ட் எடுக்கிறாரு..நானும் எப்போதும் அங்க தான் இருக்கேன், கூட அருந்ததி அத்தையும் இருக்காங்க.. எனக்கென்னவோ அது சேஃப்னு தோணுது,அப்புறம் கொஞ்சம் நாள் கழுச்சு இவ என்னதான் யோசிக்கிறானு தெரிஞ்ச பின்னால நாம முடிவெடுக்கலாம் அங்கிள்!”
“மேலும் அங்க சிவாவோட டிஸ்டபர்சன்ஸ் எதுவும் இருக்காது!”
மாணிக்கம் ரொம்ப நேரம் யோசித்த பின்னால் ஒரு முடிவுக்கு வந்தவராய், தர்ஷினியை அழைத்துபோக சம்மதித்தார். காவ்யா கதவை தட்டி அரைமணி நேரம் கழித்து கதவைத்திறந்தவள் இவளை ஒரு பொருட்டாய் மதிக்கவே இல்லை. காவ்யா தர்ஷினியின் ஆடைகளை பேக் செய்ய, மாணுக்கமும் அவளுக்கு தேவையான பொருட்களை ட்ராலியில் போட்டுக்கொடுத்தார். அதை பார்க்கும்போது தர்ஷினிக்கு சிறிது வேதனையாய் இருந்தது. அவளுக்கு தாயில்லை என்ற குறை தெரியாது வளர்த்தவர், தாயுமானவர், எல்லா விசயத்திலும் இவளுக்கு சகல சுதந்திரத்தைக் கொடுத்தவர், இந்த ஒரு விசயத்தில் மட்டும் இவளிடம் வாதிடவும், இவள் விருப்பத்தை மறுக்கவும் செய்கிறார், எனில் அப்படி என்ன இரகசியம் இவள் அறியாது சிவாவிடம் இருக்கிறது.