என்ன தான் தனக்கு தானே தைரியம் சொல்லி கொண்டாலும் மனதின் தவிப்பு மட்டும் அடங்க மறுத்தது. ஒரு முறை அவளை பார்த்தால் இந்த தவிப்பு குறையுமோ என தோன்றிய மறுநொடி அவள் அறைக்கதவின் முன் நின்றிருந்தான்.
ஏதோ ஒரு வேகத்தில் வந்துவிட்டவனுக்கு, கதவு பூட்டியிருக்கும் என்பது உறைக்க சலிப்போடு திரும்பினான். ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக கதவு திறந்திருந்தால் என்று தோன்றவும், மெதுவாக கதவை தள்ள... அது திறந்து கொண்டது. சத்தமெழுப்பாது உள்ளே சென்று, அவளை பார்த்தவனுக்குள் நிம்மதி பரவியது.
மனத்தவிப்பு குறையவும் தான், சரயூ கதவை பூட்டாதது ஆச்சரியத்தைத் தந்தது. அவன் நினைத்தது போல் மனைவியின் மனதில் மாற்றம் வந்திருக்கிறது. அவள் தன்னை நம்பியதால் தான் கதவை பூட்டவில்லை. இம்முறை தான் எதையும் செய்து அவளை காயபடுத்திட கூடாது என்ற முடிவோடு தன்னறைக்கு திரும்பிவிட்டவனுக்கு சுத்தமாக தூக்கம் வரவில்லை. சரயூவின் மாற்றத்தில் மனம் மகிழ்ந்தாலும், கனவின் தாக்கம் ஒரு ஓரத்திலிருக்க, படுக்கையில் இமைகளை மூடிக்கிடந்தான்.
இரண்டு மணி நேரம் கடந்தும் தூக்கம் வராது புரண்டு கொண்டிருக்க...அறையின் கதவு சத்தமில்லாது திறக்கபட்டது. விடிவெள்ளியின் வெளிச்சத்தில், ஒரு உருவம் நுழைவதை பார்த்தவன் மனைவியை கண்டுகொண்டான்.
‘இவ எதுக்கு வரா? ஒரு வேளை என்னை மாதிரியே கனவு கண்டிருப்பாளோ? என்னதா செய்றா பார்ப்போம்’ நினைத்தவன் அசையாது படுத்திருந்தான்.
சரயூ இவனை நோக்கி வரவும் இவனுக்குள் எதிர்பார்ப்புகள் மலையென எழுந்து கொண்டன. இவன் மீதான காதலை முத்தத்தால் வெளிபடுத்துவாள் என்று அவசரமாக கற்பனை குதிரையில் சவாரி செய்தது மனது.
மங்கலான வெளிச்சத்தில் உருவம் தெரியுமே தவிர வேறேதும் தெளிவாகக் காண முடியாததை நினைத்து கோபமாக வந்தது. அவளின் முகத்தில் வழியும் காதலையும் வெட்கத்தையும் பார்த்து ரசிக்க முடியாதே! பரவாயில்லை... மனைவியின் முத்தத்தை பெற்றதும் அறையின் விளக்கை ஒளிரவிட்டு அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்திடும் புதிய யோசனை உதிக்கவும், உற்சாகத்தில் உள்ளம் துள்ளியது.
இதற்குள் இவனருகே வந்திருந்தவள், இவனையே பார்ப்பது தெரிந்தது. சிறிது நேரம் சென்றிருக்க, அவளின் காதலுக்காக ஜெய் காத்திருக்க, அவளின் வலது கை மட்டும் உயர்ந்தது.
சரயூவை மிகவும் ஆர்வமாக கண்டிருந்தவனுக்கு அவளின் கையிலேதோ இருப்பது புரிய...இன்னும் கூர்ந்து பார்த்தான். விடிவெள்ளியின் சிறு வெளிச்சம் அந்த பொருளில் பட்டு சிதறி, அது ஒரு கத்தி என்பதை உணர்த்தியது. அவளை கொண்டவனுக்கோ, எல்லாம் முடிந்துவிட்டது உறைத்தது.
காதலை ஊற்றி தன்னை உயிர்ப்பிப்பாள் என்று அவன் நினைத்திட, உயிரைக் கொல்ல வந்திருக்கிறாள் தன்னவள்! திருமண பரிசாக இவன் கற்பனைகள் பல சொல்லியிருக்க, ஆசை மனைவியின் முதல் பரிசில் வாயடைத்து போனான் ஜெய்.
கணவன் மனைவிக்கிடையே எத்தனையோ பொருத்தங்களை கேள்விபட்டிருக்கிறான். ஆனால் இது போலொன்றை இன்று தான் முதன்முறையாக காண்கிறான். நேற்று கூட, ப்ரியா ஆதர்ஷை கொன்றுவிடுவேன் என்று சொன்னதும் அவனும் அவள் கையால் சாவதை விரும்பி ஏற்றானே... வார்த்தைகள் ஒன்றை சொன்னாலும் அவர்களின் கண்களில் காதல் இருந்ததே! அதில் அவர்களிடையேயான அன்னியூன்யத்தையல்லவா கண்டான். சரயூவோ, அவளுக்குள் இருக்கும் காதலையே உணராத போது, இவர்களுக்கிடையில் அன்னியூன்யம் எப்படியிருக்கும்? மனைவியின் செயலுக்கு புதியதொரு நேர்வினையான காரணத்தை தேடி வீழ்ந்தது ஜெய்யின் காதல் மனது.
நடக்கட்டும் அவள் ஆசையாவது நடக்கட்டும்! வருடக்கணக்கில் காதலை சுமந்து அவளை வென்றிட நினைத்த அவன் ஆசை தான் நிறைவேறவில்லை. இவனைக் கொல்லும் அவள் ஆசையாவது நிறைவேறட்டும். சரயூவின் எண்ணம் ஜெயித்து இவன் உயிர் பிரியும் அந்த கடைசி நிமிடத்திலாவது அவளுக்கு இவன் காதல் புரிந்துவிடாதா என்ற விபரீதமான ஆசை, இவனை அசையாமல் படுத்துகிடக்க வைத்தது.
இரு கைகளாலும் கத்தியை அழுத்தமாக பிடித்து கொண்டவளின் கைகள் அவளின் தலைக்கு மேலேறின.
காதலியின் கையால் கிடைக்கவிருக்கும் இனிமையான யாத்திரைக்கு தயாராகி இருந்தவன், தன் கண்களை மூடிக்கொண்டான்.
இதோ, இப்போது, இன்னும் சில நொடிகளில்...என்று காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திடீரென கேட்ட மெல்லிய விசும்பல் சத்தத்தில் கண்களை திறந்து பார்த்தவனுக்கு சரயூ அழுகிறாள் என்பது புரிந்தாலும், தன் காதல் வெற்றியடைந்து விட்டது என்ற எண்ணம் மனதிலெழுந்து அவனுக்குள் நிம்மதியை பரப்புவதை தடுக்கமுடியவில்லை. தன்னை எதற்காக கொல்ல வந்தாள்? ஏன் அழுகிறாள்? கேள்விகள் மனதை அரிக்க தொடங்கியது.
“ரெண்டாவது கொலைனாலும் என்னோட கை நடுங்குதே! உன் மேல உண்மையான பாசம் வச்சிட்ட என்னால உன்னை கொல்ல முடியாதுடா!” என்று மிக மெல்லியக் குரலில் புலம்பியவள் இன்னும் சிறிது நேரம் அழுதுவிட்டு, தான் வந்த சுவடே இல்லாது திரும்பி சென்றுவிட்டாள்.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}