அப்பாவை பார்த்தும் துள்ளி சென்று அவரை கட்டிக்கொண்டாள் சரயூ.
ஆதர்ஷின் சமாதானங்கள் செயலிழந்திட அழுது ஆர்பாட்டத்தில் மூழ்கியிருந்த குழந்தை இவர்களை கண்டதும் கைக்கொட்டி சிரிக்க தொடங்கிவிட்டான்.
ராகுலின் வீட்டிற்கு வந்ததிலிருந்து எல்லோரையும் படுத்தி எடுத்திருந்த யதுவின் அழுகை ஸ்விட்ச் போட்டார் போல் நின்றுவிட்ட ஆச்சரியத்தில் ஆதரஷ், “எதை பார்த்து யதுக்குட்டி இப்படி சிரிக்குறா?” குழந்தையிடம் கேட்டபடி திரும்ப, தந்தையிடம் செல்லம் கொஞ்சிய மனைவியை ரசித்தபடி நின்றிருந்த ஜெய்.
‘ஆனாலும் யதுக்கு இவ்வளவு ஞாபக சக்தி கூடாது’ என்று நினைத்து கொண்டவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“எப்படியிருக்க ஜெய்?” என்று அவனை கலைக்க...
“நல்லாயிருக்க ஆதர்ஷ்” என்று பதில் சொல்லி முடிப்பதற்குள் இவனிடமாக தாவியிருந்த குழந்தையை வாங்கியிருந்தான்.
யது ஜெய்யை பார்த்து புன்னகைக்க, “யது கண்ணா... சிரிப்பெல்லா பலமாயிருக்கு” என்று குழந்தையிடம் கேட்க
“யதுக்கு சேறுல விளையாட்றது ரொம்ப பிடிக்குமா... அதான் உன்னை கூட பிடிக்குது” என்று படு சீரியசாய் ஆதர்ஷ் சொல்லவும் சில நொடிகள் புரியாமல் முழித்த ஜெய்யிற்கு அன்று சரயூ தன் மீது சேற்றை பூசியிருக்க குழந்தை விளையாட கேட்டது ஞாபகம் வரவும்...
‘அய்யோ...இன்னைக்கும் இவங்கட்ட மாட்டிக்கிட்டனா? எல்லாரும் மறந்தாலும் இந்த வாலு யாரையும் மறக்கவிடாது போலும்’ என்று குழந்தையை பார்த்து சிரிக்க... யதுவோ இவனை தோட்டத்திற்கு அழைத்து செல்லும்படி கையசைக்கவும்...
“என்னை காப்பாத்த கூடாதா ஆதர்ஷ்? ஏன் இப்படி வச்சு செய்றீங்க?” என்று பாவமாக கேட்டிட...
“விடு ஜெய்! எங்களுக்கு வாய்ச்ச ஒரே அடிமை நீ என்னும்போது அவ்ளோ சீக்கிரம் விட்ற முடியுமா?” என்று சிரித்தான்.
“சரயூ...வா வா! ஜெய் எங்க?” உற்சாகமாக வரவேற்ற ராகுலிடம்,
“சஞ்சு வெளிய இருக்கா. மைதி எங்க?”
அலங்காரம் நடந்துகொண்டிருக்க... மைத்ரீயை பார்க்க சரியான சாக்கு கிடைக்காமல் தேங்கி நின்றிருந்தவனுக்கு தேடி வந்த வாய்ப்பு தேனாக இனித்தது.
“என்னோட வா சரயூ! நான் அழைச்சிட்டு போற”
அவனை வேற்று கிரக வாசியாக கண்டவள், “இது நம்ம வீடுன்னு, உனக்கு ஞாபகமிருக்கா ராகுல்? எனக்கு போகத் தெரியாதா என்ன?” என்று கேட்டுவிட்டவளுக்கு பிறகுதான் உறைத்தது அவன் எண்ணம்.
“பரவாயில்ல சரயூ! நீ இப்போ ஒரு கெஸ்ட்...அதனால மரியாதை நடத்த வேண்டியது என்னோட கடமை”
“எது....இது....உன்னோட கடமை?” என்று ஏற்ற இறக்கங்களோடு சரயூ கேட்டிட...
மாட்டிக்கொண்டது புரிந்து அசடு வழிய தங்கையோடு நடக்க
“ரொம்ப வழியுது, துடைச்சிக்கோ ராகுல்!”
அறைக்குள்ளே சென்ற சரயூ, “மைதி!” என்று தோழியை தழுவிக்கொள்ள
“என்ன மையூ இப்படி புடவை கட்டியிருக்க?” என்று கேட்டபடி தோழிகளை பிரித்திருந்தான் ராகுல்.
“ஏன் நல்லாதானே இருக்கு?” என்று பிரியா கேட்டிட வடிவும் சாரதாவும் அதானே என்பதாய் இவனைப் பார்க்க...
சட்டென மனைவியின் முன் மண்டியிட்டு புடவை கொசுவ மடிப்புகளை சரிசெய்ய ஆரம்பித்தான்.
“நாங்க பொம்பளைங்க, என்னதா... அலங்காரம் செய்து அழகு சிலையா ரெடி பண்ணாலும் இந்த ஆம்பளைங்க கண்ணு மட்டும் குறை குத்த கண்டுபிடிக்கதா அலையுது” என்று ஆதர்ஷையும் மனதில் வைத்து ப்ரியா சொல்லிட
“நீங்க எப்படி வேணா எடுத்துக்கோங்க ப்ரியா...ஆனா நான் உங்க யாரையும் குறை சொல்லலை. என் மையூ பெர்ஃபெக்ட்டா இருக்கனும்...” இதற்குள் கொசுவ மடிப்புகளை சரியாக நிறுத்தியிருந்தவன், “பாருங்க... இப்போ எப்படியிருக்கு...” என்று பெருமையாக சொல்லவும்... பெரியவர்கள் சிரிக்க
“இதுதா சாக்குனு இங்கயே இருக்கலாம்னு நினைக்காதீங்க... இன்னும் கொஞ்ச அலங்காரமிருக்கு... நீங்க கிளம்புங்க...” என்று அவனை வெளியேற்றினாள் ப்ரியா.
நடந்தவைகளை பார்த்தாலும் தன்னுடைய தனிவுலகில் தொலைந்திருந்தாள் சரயூ.
மைத்ரீயை பார்த்ததும் ராகுல் அவளின் புடவையை சரிசெய்ததும்...அவன் கொசுவத்தை மடித்து நிறுத்திய போது காதலுடன் கணவனின் தலையை வருடிய மைத்ரீயும்... அவர்களுக்கிடையே இருந்த அன்னியூன்யமும் இவளை ஜெய்யிடம் துரத்துகிறது.